search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    நாடு முழுக்க 100 மருத்துவ கல்லூரிகள் அங்கீகாரம் ரத்தாகும் அபாயம் - அதிர்ச்சி தகவல்!
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    நாடு முழுக்க 100 மருத்துவ கல்லூரிகள் அங்கீகாரம் ரத்தாகும் அபாயம் - அதிர்ச்சி தகவல்!

    • 2014-ம் ஆண்டுக்கு முன்பு மருத்துவ கல்லூரிகள் எண்ணிக்கை 387 ஆக இருந்தது.
    • மருத்துவ படிப்புக்கான எம்பிபிஎஸ் சீட்களின் எண்ணிக்கை 51 ஆயிரத்து 348-இல் இருந்து 99 ஆயிரத்து 763 ஆக அதிகரிப்பு.

    இந்தியாவில் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் சுமார் 40 மருத்துவ கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டு இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. தேசிய மருத்துவ கவுன்சில் விதிகளை பின்பற்றாத காரணத்தால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    இதுதவிர தமிழ் நாடு, குஜராத், அசாம், பஞ்சாப், ஆந்திர பிரதேசம், புதுச்சேரி மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் செயல்பட்டு வரும் சுமார் 100-க்கும் அதிக மருத்துவ கல்லூரிகளின் அங்கீகாரமும் ரத்து செய்யப்படலாம் என்ற சூழல் ஏற்பட்டுள்ளது. 2014-ம் ஆண்டு முதல் இந்தியாவில் மருத்துவ கல்லூரிகள் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து இருக்கிறது.

    2014-ம் ஆண்டுக்கு முன்பு மருத்துவ கல்லூரிகள் எண்ணிக்கை 387 ஆக இருந்தது. தற்போது இந்த எண்ணிக்கை 654 ஆக அதிகரித்துள்ளது என்று மத்திய மந்திரி பாரதி பிரவீன் பவர் மாநிலங்களவையில் தெரிவித்தார். இதே போன்று 2014-ம் ஆண்டு மருத்துவ படிப்புக்கான எம்பிபிஎஸ் சீட்களின் எண்ணிக்கை 51 ஆயிரத்து 348-இல் இருந்து தற்போது 99 ஆயிரத்து 763 ஆக அதிகரித்து இருக்கிறது.

    மருத்துவ மேற்படிப்புக்கான சீட்களின் எண்ணிக்கை 2014-இல் 31 ஆயிரத்து 185-இல் இருந்து தற்போது ரூ. 64 ஆயிரத்து 559 ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் மருத்துவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் நோக்கில் அரசாங்கம் மருத்துவ கல்லூரிகள் மற்றும் எம்பிபிஎஸ் சீட்களின் எண்ணிக்கையை கணிசமாக அதிகரித்து இருக்கிறது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

    மருத்துவ கல்லூரிகள் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டது குறித்து மருத்துவ துறையை சேர்ந்த வல்லுனர்கள் கூறும் போது,

    'தேசிய மருத்துவ கவுன்சில் ஆதார் சார்ந்த பயோமெட்ரிக் முறையிலான வருகை பதிவேட்டை சார்ந்து இருக்கிறது. ஆனால் மருத்துவர்களின் பணி நேரம் நிர்ணயிக்கப்படாத சூழலே நிலவுகிறது. அவர்கள் இரவு நேரம் மற்றும் அவசர காலங்களிலும் பணியாற்ற வேண்டும். இதனால் தேசிய மருத்துவ கவுன்சில், பணி நேரத்தை நிர்ணயிக்க வலியுறுத்தி வருகிறது. மருத்துவ கல்லூரிகளின் நிர்வாகம் நடைமுறைக்கு உகந்ததாக இல்லை, இதனால் தேசிய மருத்துவ கவுன்சில் இதனை சரி செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது,' என்று தெரிவித்தார்.

    இதுகுறித்து மற்றொரு வல்லுனர் கூறும் போது, 'மருத்துவ கல்லூரிகளில் போதுமான வசதிகள் இல்லாத காரணத்தாலேயே தேசிய மருத்துவ கவுன்சில் அவற்றின் அங்கீகாரத்தை ரத்து செய்து வருகிறது. இதுதவிர இதுபோன்ற கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. இது முற்றிலும் முரணாக இருக்கிறது. இது உலகளவில் நாட்டின் நற்பெயரை பாதித்து விடும். உலகளவில் அதிக மருத்துவர்களை உருவாக்கும் நாடு இந்தியா. இது போன்ற சம்பவங்கள் வெளியுலகிற்கு வரும் போது, இந்திய மருத்துவர்கள் மீதான நம்பிக்கை உலகளவில் பாதிக்கப்பட்டு விடும்,' என்றார்.

    Next Story
    ×