

முல்லை பெரியாறு அணை பகுதியில் பராமரிப்பு பணிகளை செய்வது தொடர்பான வழக்கில் கேரள அரசின் பதில் மனுவுக்கு பதிலளிக்க தமிழக அரசுக்கு 3 வாரகால அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது.
முல்லை பெரியாறு அணை பகுதியில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள செல்லும் தமிழக அதிகாரிகளை கேரள போலீசார் தடுத்து நிறுத்துவதாக புகார் கூறப்பட்டு வந்தது. இது தொடர்பாக தமிழக அரசு சார்பில் கடந்த 2015-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
அதில், ‘முல்லை பெரியாறு பகுதியில் தமிழக அரசின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தடையின்றி சென்று வரவும், முல்லைக்கொடி மழை அளவு நிலையத்துக்கு சென்று தேவையான புள்ளி விவரங்களை சேகரிக்கும் வகையில் அவர்களை அந்த பகுதியில் அனுமதிக்கவும் கேரள அரசு மற்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்’ என கூறப்பட்டு இருந்தது.
மேலும் வல்லக்கடவு காட்டு வழிச்சாலையை செப்பனிட அனுமதிக்குமாறு கேரள அரசு மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அந்த மனுவில் கூறப்பட்டது.
இந்த மனுவின் மீதான பதில் மனுவை கேரள அரசு சென்ற வாரம் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தது. இந்த மனு மீதான விசாரணை நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் மூத்த வக்கீல் ராகேஷ் திவிவேதி ஆஜரானார்.