விபத்து உயிரிழப்புகள் குறைவு - பாராளுமன்றத்தில் தமிழக அரசுக்கு நிதின் கட்காரி பாராட்டு

விபத்து உயிரிழப்புகள் குறைய நடவடிக்கை எடுத்ததற்காக பாராளுமன்றத்தில் தமிழக அரசுக்கு நிதின் கட்காரி பாராட்டு தெரிவித்தார்.
மத்திய சாலை போக்குவரத்து மந்திரி நிதின் கட்காரி
மத்திய சாலை போக்குவரத்து மந்திரி நிதின் கட்காரி
Published on

புதுடெல்லி:

பாராளுமன்ற மக்களவையில், மோட்டார் வாகன திருத்த மசோதாவை மத்திய சாலை போக்குவரத்து மந்திரி நிதின் கட்காரி ஏற்கனவே தாக்கல் செய்திருந்தார். போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அபராத தொகையை பல மடங்கு உயர்த்த இந்த மசோதா வகை செய்கிறது.

மேலும், சாலை பாதுகாப்புக்காக தேசிய போக்குவரத்து கொள்கையை உருவாக்கவும் இதில் இடம் உள்ளது. ஓட்டுனர் உரிமம் பெற 8-ம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும் என்ற நிபந்தனை, இதில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்த மசோதா மீது மக்களவையில் நேற்று விவாதம் நடந்தது. தி.மு.க. உறுப்பினர் கனிமொழி, மாநிலங்களின் அதிகாரத்தில் இம்மசோதா தலையிடுவதாகவும், ஓட்டுனர் உரிமம் பெற கல்வித்தகுதியை ரத்து செய்யக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார். திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் சவுகதா ராய் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

பின்னர், மத்திய சாலை போக்குவரத்து மந்திரி நிதின் கட்காரி, விவாதத்துக்கு பதில் அளித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்த சட்டம் அமலுக்கு வந்த பிறகு, விபத்துகளின் எண்ணிக்கை நிச்சயமாக குறையும். விபத்து உயிரிழப்புகளின் எண்ணிக்கையை குறைத்ததற்காக தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்துக்கொள்கிறேன்.

10 மாநிலங்களின் போக்குவரத்து மந்திரிகள் ஆய்வு செய்த பிறகே இந்த மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது. மாநிலங்களின் அதிகாரங்களில் தலையிடுவது மத்திய அரசின் நோக்கம் அல்ல. மாநில அரசுகள் விரும்பினால், இந்த சட்டத்தை பின்பற்றலாம். இது கட்டாயம் அல்ல. சாலை போக்குவரத்து, மாநிலங்களின் கட்டுப்பாட்டிலேயே இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர், குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த மசோதா நிறைவேறியது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com