

தமிழ்நாடு இதழ்கள் வெளியீட்டாளர் சங்கத்தின் 8-வது ஆண்டு விழாவும், பயனெழுத்து படைப்பாளிகள் விருது வழங்கும் விழாவும் சென்னையில் நடைபெற்றது.
இதில் 27 பேருக்கு பயனெழுத்து படைப்பாளிகள் விருது வழங்கி அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது:-
தமிழகத்தில் மாணவர்கள் தங்களுக்கு தேவையான படிப்பை எங்கே, எந்த கல்வி நிறுவனத்தில் படிக்கலாம்? போன்ற பல்வேறு தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ளும் வகையிலும், கல்வி தொடர்பான அனைத்து தகவல்களையும் எளிதில் தெரிந்துகொள்ளும் பொருட்டும், மன உளைச்சல் ஏற்படும் சமயத்தில் தங்களுக்கான சந்தேகத்தை போக்கிக்கொள்ளும் பொருட்டும் 24 மணிநேரமும் இயங்கக்கூடிய ஹெல்ப்லைன் ‘14417’ என்ற எண்ணில் இயங்கும்.
புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது. இதன் மூலம் சி.பி.எஸ்.இ. பள்ளிகள் அல்ல, அதற்கு மேலும் சிறந்த பள்ளிகளாக அரசுப்பள்ளிகள் திகழும் என்பதில் சந்தேகம் இல்லை.
நூலகத்துறையின் சார்பில் இதழ்கள் வெளியீட்டாளர்களுக்கு நிலுவையில் உள்ள தொகையான ரூ.2 கோடி, விரைவில் 15 நாட்களுக்குள் வழங்கப்படும் என்ற மகிழ்ச்சியான செய்தியை இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.