தேனி மசாலா தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து- பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் கருகின

தேனி அருகே மசாலா தயாரிப்பு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் கருகி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
தீப்பற்றி எரியும் மசாலா தொழிற்சாலை
தீப்பற்றி எரியும் மசாலா தொழிற்சாலை
Published on

தேனி:

தேனி அருகே உள்ள கோடாங்கிபட்டியில் தனியார் மசாலா கம்பெனி நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு தேனி, போடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 300-க்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் வேலை பார்த்து வருகின்றனர்.

இங்கிருந்து தயார் செய்யப்படும் மசாலா பொருட்கள் பல்வேறு ஊர்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இன்று காலை திடீரென கம்பெனியின் பின் பகுதியில் இருந்து புகை மூட்டம் கிளம்பியது. இதை கவனித்த ஊழியர்கள் அங்கு சென்று பார்த்த போது ஒரு பகுதியில் தீ பிடித்து எரிந்து கொண்டு இருந்தது.

இதனால் ஊழியர்கள் அலறியடித்து வெளியே வந்தனர். இது குறித்து தேனி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 4 வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதி முழுவதும் புகை மூட்டமாக காட்சியளித்தது.

இருந்த போதும் ஆலையில் இருந்த எந்திரம், மசாலா பொருட்கள் ஆகியவை எரிந்து சாம்பலானது. சேத மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் என ஊழியர்கள் தெரிவித்தனர். 1 மணி நேரத்துக்கும் மேலாக போராடி தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

தீ விபத்துக்கான காரணம் குறித்து பழனிசெட்டிபட்டி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். காலையில் தீ விபத்து நடந்ததால் ஊழியர்கள் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினர். இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com