பெண்களுக்கு ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தை விமர்சித்த குஷ்பு

பஸ் கட்டண உயர்வை கண்டித்து தி.மு.க., காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் கரூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் குஷ்பு பெண்களுக்கு ஸ்கூட்டர் வழங்கும் திட்டம் குறித்து விமர்சித்து பேசினார்.
பெண்களுக்கு ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தை விமர்சித்த குஷ்பு
Published on

கரூர்:

பஸ் கட்டண உயர்வை கண்டித்து தி.மு.க., காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் கரூரில் பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளரும், நடிகையுமான குஷ்பு கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

டாஸ்மாக்குகளில் குவார்ட்டர் குடித்து விட்டு ரோட்டில் விழுந்து கிடக்கும் கணவர்களை அழைத்து வருவதற்காக பெண்களுக்கு ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளனர். பொங்கல் பண்டிகைக்கு மட்டும் ஒரே நாளில் ரூ. 240 கோடிக்கு விற்பனையாகி அரசிற்கு வருமானம் கிடைத்திருக்கிறது. 500 டாஸ்மாக் கடைகளை மூடிவிட்டதாக பொய் சொல்லுகிறார்கள். பஸ் கட்டணத்தை அரசு உயர்த்தியது ஏன்?. முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் பஸ்சில் பயணம் செய்கிறார்களா?. போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் பஸ்சில் பயணம் செய்வாரா?. அப்போதுதான் பஸ் கட்டணம் எவ்வளவு உயர்த்தப்பட்டுள்ளது என தெரியும்.

பஸ் கட்டண உயர்வால் சாதாரண மக்களுக்குத்தான் பாதிப்பு. தமிழக அரசும், மத்திய அரசும் எந்த வேலை வாய்ப்பையும் இளைஞர்களுக்கு தரவில்லை. உதாரணத்துக்கு மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய 4000 காலி பணியிடங்களுக்கான தேர்வினை 17 லட்சம் பேர் எழுதியுள்ளனர். இதில் இருந்தே நாட்டில் வேலை இல்லாத திண்டாட்டம் எந்த அளவுக்கு இருக்கிறது என தெரிகிறது.

பட்டதாரி இளைஞர்களை பக்கோடா விற்க மோடி சொல்கிறார். அதையே பக்கோடா விற்றால் தவறில்லை என அமித்ஷாவும் கூறுகிறார். குஜராத்தில் அமித்ஷா மகனின் நிறுவனம் 3 ஆண்டுகளில் ரூ. 8 ஆயிரம் கோடி லாபம் ஈட்டியுள்ளதாம். இது எப்படி வந்தது?. பட்டதாரி இளைஞர்களை பக்கோடா விற்க சொல்லும் அமித்ஷா தனது மகனை ஏன்?பக்கோடா விற்கும் தொழிலை செய்ய சொல்லவில்லை.

நாடு முழுவதும் ஒரே மதம், காவிக்கொடி என கொண்டு செல்ல பா.ஜ.க. அரசு துடிக்கிறது. 2019 பாராளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய மாற்றம் வரும். ராகுல்காந்தி பிரதமராக அமர்வார். தமிழகத்தின் முதல்வராக தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் பதவி ஏற்பார். தமிழர்களின் ஒரே நிறம் சுயமரியாதை மட்டும்தான். தமிழக மக்களுக்கு நல்லது நடக்க தி.மு.க-காங்கிரஸ் கூட்டணியால் மட்டுமே முடியும். அடுத்து வருகிற தேர்தலில் மக்கள் பணத்தை வாங்கி கொண்டு அவர்களுக்கு வாக்களிக்காதீர்கள். நாட்டின் நலன் கருதி வருங்கால சந்ததியினரை கருத்தில் கொண்டு வாக்களியுங்கள். கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி நடப்பதால் காவிரி பிரச்சினையை எழுப்புகிறார்கள். முல்லைபெரியாறு அணையில் இருந்து தண்ணீர் தரவில்லை. அதை யாரும் பெரிதுபடுத்துவதில்லை.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக குஷ்பு நிருபர்களிடம் கூறும்போது,

ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் சொத்து குவிப்பு வழக்கில் அவர் சிறை சென்றிருப்பார். ஜெயலலிதா படத்திறப்புக்கு விஜயதரணி எம்.எல்.ஏ. ஆதரவு தெரிவித்தது குறித்து கட்சி தலைமை பார்த்துக்கொள்ளும்.

தமிழகத்தில் பா.ஜ.க. காலூன்ற முடியாது. ஒரு இடைத்தேர்தலில் நோட்டாவை விட குறைவான வாக்குகளை பெற்ற கட்சி பா.ஜ.க. தான். மத்திய அரசின் பட்ஜெட்டில் எந்த பயனும் இல்லை. 82 மருத்துவ கல்லூரி புதிதாக தொடங்குவதாக அறிவிக்கப்பட்டதில் தமிழகத்திற்கு ஒரு கல்லூரி கூட இல்லை. தமிழகத்திற்கு நிதியும், எந்த திட்டமும் இல்லை. ஆனால் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மத்திய பட்ஜெட்டை பாராட்டி வருகிறார். பா.ஜ.க.வின் பிடியில் இந்த அரசு செயல்படுகிறது என்றார். #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com