

ஜம்மு:
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் குல்காம் மாவட்டத்திற்குட்பட்ட நவ்பக் கன்ட் கிராமத்தில் சில தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, இன்று காலை அந்த கிராமத்துக்கு விரைந்து சென்ற பாதுகாப்பு படையினர் அந்த கிராமத்துக்கு செல்லும் நாற்புற சாலைகளையும் சுற்றி வளைத்தனர்.
அப்பகுதியில் வசித்த மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டனர்.
தீவிரவாதிகள் பதுங்கி இருந்த இடத்தை நெருங்கி அவர்களை சரணடையுமாறு எச்சரித்தனர். எச்சரிக்கையை பொருட்படுத்தாத தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கிகளால் சுட்டு தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர்.
இருதரப்பினருக்கும் இடையில் நடந்த மோதலில் ஒரு தீவிரவாதியை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். இருதரப்பு மோதலில் ராணுவத்தை சேர்ந்த ஒரு வீரரும் உயிரிழந்தார்.
தொடர்ந்து அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடைபெற்று வரும் நிலையில் புல்வாமா மாவட்டத்தில் உள்ள லாம் கிராம் கிராமத்தில் நடைபெற்றுவரும் தேடும் பணியில் தீவிரவாதிகளின் பதுங்குமிடம் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.