செஷல்ஸ் தீவில் இந்திய ராணுவ தளம் - இணைந்து பணியாற்ற இருநாட்டு தலைவர்கள் உறுதி

செஷல்ஸ் தீவில் இந்திய கடற்படை தளம் அமைக்க அந்நாட்டு எதிர்க்கட்சிகள் முட்டுக்கட்டை போட்ட நிலையில், அதனை நிறைவேற்ற பணியாற்றுவோம் என மோடி - டேனி பயூரே இணைந்து தெரிவித்துள்ளனர். #Seychelles #India #AssumptionIsland
செஷல்ஸ் தீவில் இந்திய ராணுவ தளம் - இணைந்து பணியாற்ற இருநாட்டு தலைவர்கள் உறுதி
Published on

புதுடெல்லி:

இந்திய பெருங்கடலில் இருக்கும் நாடான செஷல்ஸின் கட்டுப்பாட்டில் உள்ள அஸ்சம்ப்சன் தீவில் இந்திய கடற்படை தளம் அமைக்க கடந்த ஜனவரி மாதம் இரு நாடுகளுக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த கடற்படை தளம் அமைந்தால் இந்திய பெருங்கடல் பிராந்தியம் தமது கட்டுப்பாட்டில் இருக்கும் என்றும் சீனாவின் கை ஓங்காது என இந்தியா கணக்கிட்டது.

ஆனால், இந்த திட்டத்தால் தமது நாட்டு பகுதியை இன்னொரு நாட்டுக்கு தாரை வார்த்தது போல ஆகிவிடும் என குற்றம் சாட்டிய செஷல்ஸ் எதிர்க்கட்சிகள், இந்த ஒப்பந்தத்தை எதிர்த்தனர். இதனால், இந்த திட்டத்திற்கான மசோதா அந்நாட்டு பாராளுமன்றத்தில் நிறைவேற்ற முடியவில்லை.

இந்த சூழ்நிலையில், 5 நாள் அரசு முறை பயணமாக செஷல்ஸ் அதிபர் டேனி பயூரே இந்தியா வந்துள்ளார். இன்று டெல்லியில் பிரதமர் மோடியை அவர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, அஸ்சம்ப்சன் தீவில் இந்திய கடற்படை தளம் அமைப்பது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

சந்திப்பின் முடிவில் இருநாடுகளுக்கு இடையே சில துறைகளில் ஒப்பந்தம் கையெழுத்தானது. செஷல்ஸ் நாட்டின் பாதுகாப்பை மேம்படுத்த இந்தியா 100 மில்லியம் அமெரிக்க டாலர் நிதியுதவி வழங்குவதாக இந்தியா அறிவித்தது.

இதனை அடுத்து இரு தலைவர்களும் செய்தியாளர்களை கூட்டாக சந்தித்த போது, இரு நாடுகளின் உரிமைகளின் அடிப்படையில் அஸ்சம்ப்சன் தீவில் இந்திய கடற்படை தளம் அமைப்பதில் இணைந்து பணியாற்ற உறுதியுடன் இருப்பதாக கூறினர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com