கடலூரில் 2-வது நாளாக தினகரன் ஜோதிடர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை

கடலூரில் டி.டி.வி. தினகரன் குடும்பத்தினருக்கு ஆஸ்தான ஜோதிடரான சந்திரசேகர் வீட்டில் வருமான வரித்துறையினர் 2-வது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர்.
கடலூரில் 2-வது நாளாக தினகரன் ஜோதிடர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை
Published on

கடலூர்:

கடலூர் திருப்பாதிரிப் புலியூர் சரஸ்வதி நகரில் வசித்து வருபவர் சந்திரசேகர். பிரபல ஜோதிடர். இவர் பங்கு சந்தை புரோக்கராகவும் இருந்து வருகிறார்.

சசிகலா மற்றும் டி.டி.வி. தினகரன் குடும்பத்தினருக்கு சந்திரசேகர் ஆஸ்தான ஜோதிடராகவும் இருந்து வந்தார்.

சசிகலா, தினகரன் குடும்பத்தினர் இடம் வாங்குவது தொடர்பாகவும், புதிய தொழில் தொடங்குவது மற்றும் பல்வேறு சுபநிகழ்ச்சிகளின் பூஜைகள் தொடர்பாகவும் ஆலோசனை இவரிடம் கேட்டு வந்துள்ளனர்.

சசிகலா குடும்பத்துடன் சந்திரசேகர் நெருக்கமாக இருந்து வந்தார். இவர் பிரபல சினிமா நட்சத்திரங்களுக்கும் ஜோதிடம் பார்த்து உள்ளார்.

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா, முன்னாள் பிரதமர் தேவகவுடா ஆகியோருக்கும் இவர் ஜோதிடம் பார்த்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஜோதிடர் சந்திரசேகர் வீட்டுக்கு நேற்று மாலை 5 மணிக்கு வருமானவரித்துறை அதிகாரிகள் 5 பேர் காரில் வந்தனர். பின்னர் அவர்கள் சந்திரசேகர் வீட்டுக்குள் சென்று கதவுகளை பூட்டிக் கொண்டு அதிரடி சோதனை நடத்தினர்.

ஜோதிடர் வீட்டின் தரை தளம் மற்றும் மேல்தளத்தில் சோதனை நடத்தப்பட்டது. சோதனையின் போது வீட்டில் இருந்து யாரும் வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை.

சந்திரசேகரின் வீட்டையொட்டி உள்ள அவரது அலுவலகத்திலும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். அங்கு கட்டுக்கட்டாக ஆவணங்கள் மற்றும் ஷேர் மார்க்கெட் முதலீடு பத்திரங்கள் ஆகியவை சிக்கியது.

இந்த சோதனை நள்ளிரவு வரை நடைபெற்றது. அதன் பின்னர் வருமான வரித்துறை அதிகாரிகள் காரில் புறப்பட்டு சென்றனர்.

இன்று காலை 6 மணிக்கு மீண்டும் வருமான வரித்துறை அதிகாரிகள் 5 பேர் ஜோதிடர் சந்திர சேகர் வீட்டுக்கு வந்தனர். அப்போதும் வீட்டின் கதவுகளை பூட்டிக் கொண்டு அதிகாரிகள் தொடர்ந்து 2-வது நாளாக சோதனை நடத்தினார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com