அரசு துறைகள் இணைந்து செயல்படவில்லை: கவர்னர் கிரண்பேடி குற்றச்சாட்டு

புதுவையில் டெங்கு காய்ச்சலை தடுக்க அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை. அரசு துறைகள் இணைந்து செயல்படவில்லை என்று கவர்னர் கிரண்பேடி குற்றச்சாட்டி உள்ளார்.
அரசு துறைகள் இணைந்து செயல்படவில்லை: கவர்னர் கிரண்பேடி குற்றச்சாட்டு
Published on

புதுச்சேரி:

புதுவை குருமாம் பேட்டில் நகர் மற்றும் கிராமப்பகுதிகளில் அள்ளப்படும் குப்பைகளை தேக்கி வைக்க குப்பை கிடங்கு உள்ளது.

புதுவை கவர்னர் கிரண்பேடி இந்த குப்பை கிடங்கை இன்று ஆய்வு செய்தார். அதிகாரிகளிடம் கவர்னர் குப்பைகளை எடுத்து வருவது, பிரிப்பது, குப்பையிலிருந்து உரம் தயாரித்தல், மின்சாரம் தயாரிப்பு திட்டங்களின் நிலை குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.

கவர்னருடன் உள்ளாட்சி துறை இயக்குனர் முகமது மன்சூர், உழவர்கரை நகராட்சி கமிஷ்னர் ரமேஷ் மற்றும் அதிகாரிகள் உட னிருந்தனர்.

பின்னர் கவர்னர் கிரண்பேடி நிருபர்களிடம் கூறியதாவது:-

புதுவையில் குப்பைகளை அகற்றுவதில் திருப்திகரமான நட வடிக்கைகள் உள்ளது. ஆனாலும் குப்பைகளை கையாள்வதில் மக்களின் ஒத்துழைப்பு அவசியம். மக்கும், மக்காத குப்பைகளை தரம் பிரித்து மக்கள் வழங்க வேண்டும்.

மத்திய அரசிடம் குப்பை திட்டத்திற்காக நிதியை கேட்டு பெற முடியும். இதற்காக மத்திய அரசு தனியாக ஒரு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அதிகாரிகள் இதற்கான கோப்புகளை தயாரித்து மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும். மத்திய அரசிடம் இதற்காக நிதி பெற்றுத்தர நான் தயாராக உள்ளேன்.

புதுவையில் டெங்கு காய்ச்சலை தடுக்க அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை. அரசு துறைகள் இணைந்து செயல்படவில்லை. அரசு துறைகள் இணைந்து செயல்பட்டால்தான் டெங்கு காய்ச்சலை ஒழிக்க முடியும். அதிகாரிகள் களப்பணியாற்றவும் முன்வர வேண்டும். மருத்துவ மாணவர் சேர்க்கை விவகாரத்திலும் கல்வித்துறையும், சுகாதாரத் துறையும் இணைந்து செயல்படவில்லை. இதனால்தான் சில பிரச்சினைகள் ஏற்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதைத்தொடர்ந்து மும்பை ரெயில் நிலையத்தில் நடந்த உயிரிழப்பு குறித்து கிரண்பேடியிடம் கேட்டபோது, மும்பை ரெயில் நிலையத்தில் பாலம் கட்டுவதற்கு 2 ஆண்டுகளுக்கு முன்பே அனுமதி கிடைத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதற்கு கீழ்மட்ட அதிகாரிகளே முழு பொறுப்பேற்க வேண்டும் என்று தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com