

மேற்குவங்க மாநிலத்தின் வடக்கு நகரமான டார்ஜிலிங் மலைப் பகுதி மக்கள், தங்கள் பகுதியை மேற்கு வங்கத்தில் இருந்து பிரித்து கூர்காலாந்து எனும் தனி மாநிலம் உருவாக்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்த வண்ணம் உள்ளனர்.
அவ்வப்போது, இது தொடர்பான போராட்டங்களை அப்பகுதி மக்கள் நடத்துவதும், அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் அரசு ஈடுபடுவதும் வழக்கமாக உள்ளது.
இதற்கிடையில், மேற்கு வங்காளம் மாநிலத்தில் பத்தாம் வகுப்பு வரை வங்காள மொழியை கட்டாயப் பாடமாக பயில வேண்டும் என அரசு உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கூர்க்காலாந்து விவகாரம் மீண்டும் வெடித்தது.
இந்நிலையில், கடந்த 12-ம் தேதியில் இருந்து கூர்காலாந்து பகுதியில் முழு அடைப்புக்கு கூர்கா ஜனமுக்தி மோர்சா கட்சியினர் அழைப்பு விடுத்தனர்.
இதையடுத்து, அப்பகுதியில் ராணுவம், துணை ராணுவம் மற்றும் போலீசார் குவிக்கப்பட்டனர். போராட்டம் நடத்திய அக்கட்சியைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டனர். போலீசார், பாதுகாப்பு படையினர் மற்றும் போராட்டக்காரர்களுக்கு இடையில் பல இடங்களில் கைகலப்பு சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன.
ஆறாவது நாளாக இன்றும் போராட்டம் தொடர்வதால் சுற்றுலாத்தலமான டார்ஜிலிங் முற்றிலும் முடங்கியுள்ளது. அப்பகுதிக்கு சுற்றுலா வந்திருந்த ஏராளமான பேர் செய்வதறியாது திகைத்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்று டார்ஜீலிங் நகரில் உச்சகட்ட வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இன்று பிற்பகல் நிலவரப்படி, இருதரப்பு மோதலில் கூர்கா ஜனமுக்தி மோர்சா கட்சியை சேர்ந்த இருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.