

சென்னை:
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தின் சில மாவட்டப் பகுதிகளில் நாள்தோறும் பகல் மற்றும் இரவு நேரங்களில் மாறி மாறி மின்வெட்டு ஏற்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதனை ஆரம்ப நிலையிலேயே சரிசெய்து, வெயில் காலம் முடியும் வரையிலும் மின்சாரம் தங்கு தடையின்றி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். மேலும், மாநிலம் முழுவதும் இயங்கும் சிறு குறு தொழிற்சாலைகள் உள்பட அனைத்து விதமான தொழிற்சாலைகளுக்கும் மின்சாரம் தடையில்லாமல், பாதிப்பில்லாமல் கிடைக்க வேண்டும்.
எனவே, தமிழகம் முழுவதும் மாநகர் முதல் கிராமம் வரை அனைத்து பகுதிகளுக்குமான விவசாயத்திற்கும், தொழிற்சாலைகளுக்கும், பொதுமக்களுக்கும் மின்சாரத்தை தொடர்ந்து தடையில்லாமல், பாதிப்பில்லாமல் வழங்கிட தமிழக அரசு தொடர் நடவடிக்கைகளை தொடங்க வேண்டும் என்று த.மா.கா. சார்பில் வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார். #GKVasan