சென்னை:
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
மத்திய பா.ஜ.க. அரசு ஜி.எஸ்.டி. வரியை அமல்படுத்தி செயல்படுத்தி வருகிறது. தற்போது 50 பொருட்களுக்கு 28 சதவிகித வரி நடைமுறையில் உள்ளது. மேலும் பல பொருட்களுக்கு 12 சதவிகிதமும், பல பொருட்களுக்கு 18 சதவிகிதமும் விதிக்கப்பட்டுள்ளது. வரி விதிப்பில் பல்வேறு முரண்பாடுகள் உள்ளதாகவும், தெளிவானதொரு கொள்கை பின்பற்றப்படவில்லை என்றும் வணிகர்கள், வியாபாரிகள் கருத்து தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து ஜிஎஸ்டியானது குறைக்கப்பட்டாலும் அதன் பயன் நுகர்வோருக்கு முழுமையாக சென்றடையவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.
சரக்கு மற்றும் சேவைக்கான வரியில் 12 சதவீதம் மற்றும் 18 சதவீதம் உள்ள பொருட்களுக்கு ஒரே வரியாக அதாவது 18லிருந்து 12 சதவீதமாக குறைத்தால் ஓரளவிற்கு நுகர்வோர் சிரமத்தில் இருந்து விடுபடுவார்கள். இது சம்பந்தமாக கவுன்சிலில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதனை மத்திய அரசு முக்கிய கவனத்தில் கொண்டு 18 சதவீத வரியுள்ள பொருட்களை 12 சதவீதமுள்ள பொருட்களின் வரி விதிப்பில் கொண்டுவர வேண்டும்.
மேலும் அனைத்து பொருட்களின் மீதான வரியை முழுமையாக தெளிவாக நுகர்வோர் புரிந்து கொள்ளும்படி தெளிவாக அச்சிடப்பட்ட பிறகே விற்பனைக்கு வருவதை மத்திய அரசு கண்காணிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.