ஹெலிகாப்டரில் தாழப் பறந்தாலும் புயல் சேதம் தெரியாது - எடப்பாடி பழனிசாமி மீது கமல்ஹாசன் தாக்கு

டெல்டா பகுதிகளில் தரையில் கால் பாவிட, மக்களோடு மக்களாக நின்று பார்த்தால் சோகம் தெரியும். ஹெலிகாப்டரில் எவ்வளவு தாழப்பறந்தாலும் தெரியாது என கமல்ஹாசன் விமர்சனம் செய்துள்ளார். #GajaCyclone #ReliefWork #KamalHaasan
ஹெலிகாப்டரில் தாழப் பறந்தாலும் புயல் சேதம் தெரியாது - எடப்பாடி பழனிசாமி மீது கமல்ஹாசன் தாக்கு
Published on

சென்னை:

நடிகரும் மக்கள் நீதி மய்ய கட்சி தலைவருமான கமல்ஹாசன் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து நிவாரண உதவிகளை வழங்கினார். முன்னதாக நேற்று சென்னையிலிருந்து விமானத்தில் திருச்சி சென்றார்.

அங்கு நிருபர்களிடம் பேசிய கமல்ஹாசன் உடனே தஞ்சை கிளம்புவதாகவும் 70 வாகனங்களில் நிவாரண பொருட்களை கொண்டு செல்ல போவதாகவும் கூறினார். இதுவரை நிவாரண உதவிகள் சென்று சேராத குக்கிராமங்களுக்கு சென்று வழங்க உள்ளதாக தெரிவித்து இருந்தார். அதன்படி நேற்று பிற்பகல் தஞ்சைக்கு பயணமானார்.

நேற்று திருவாரூர்- மன்னார்குடி சாலையில் உள்ள கோட்டூரில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த போராட்டத்தில் சுற்று வட்டாரத்திலுள்ள அம்மாபேட்டை, கோட்டூர், அம்மையப்பன் ஆகிய இடங்களிலிருந்து பொதுமக்கள் திரண்டு வந்து சாலை மறியலில் ஈடுபட்டிருந்தனர்.

அந்த நேரத்தில் கமல் அந்த சாலை வழியாக திருவாரூர் சென்று கொண்டிருந்தார். கமல் வருவதை அறிந்த மக்கள், அவரை முற்றுகையிட்டனர். அவரது வாகனத்துக்கும் வழிவிடவில்லை. இதனால் கமல், உள்ளிட்டவர்கள் தொடர்ந்து செல்ல முடியாமல் நடுவழியிலேயே நின்றனர்.

போராட்டக்காரர்களிடம் கமல் நிவாரண பொருட்களுடன் வந்திருப்பதாகவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்வதற்காகவே வந்திருக்கிறோம் என்று கூறி மக்களிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினார்.

அதன்பின்னர், பொதுமக்கள், கமலுடன் இருந்த மக்கள் நீதி மய்ய உறுப்பினர்கள் வைத்திருந்த உணவு பொட்டலங்களை பார்த்த பிறகு மனம் வருந்தினர். கமலின் பயணத்துக்கு வழிவிட்டு ஒதுங்கி நின்றனர். இதுகுறித்து கமல் நெகிழ்ச்சியுடன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

டெல்டா பகுதிகளுக்கு பார்வையிட சென்ற முதல்வரின் பயணம் மழை காரணமாக பாதியில் ரத்தானது.

இது தொடர்பாக கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் மறைமுகமாக தாக்கி கூறியிருப்பதாவது:-

“தரையில் கால் பாவிட, மக்களோடு மக்களாக நின்று பார்த்தால், கேட்டால்... புரியும் சோகம், தெரியும் உண்மை! ஹெலிகாப்டரில் எவ்வளவு தாழப்பறந்தாலும் இவை தெரியாது.

கேட்கிறதா அரசுக்கு? அம்மையப்பன், அம்மாபேட்டை, கோட்டூர் மக்கள், கோபத்தில் சாலை மறியலில் ஈடுபட்டிருந்த பொழுது உணவுப் பொருட்கள் கொண்டு சென்ற எங்களிடம், எங்களுக்கு உணவு இருக்கிறது, மின்சாரம்தான் இல்லை என்று பெருந்தன்மையாக வழிவிட்டது தமிழனாக என்னை பெருமைப்படவைத்தது. இவர்களா ஏழைகள்? பெருந்தன்மைச் செல்வந்தர்கள்” எனப் பதிவிட்டிருக்கிறார். #GajaCyclone #ReliefWork #KamalHaasan

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com