

குஜராத் மாநிலங்களவை தேர்தலில் பா.ஜனதா தலைவர் அமித்ஷா, மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி, அண்மையில் காங்கிரசில் இருந்து விலகி பா.ஜனதாவில் இணைந்த பல்வந்த்சிங் ராஜ்புத் ஆகியோரும், காங்கிரஸ் சார்பில் சோனியா காந்தியின் அரசியல் செயலாளர் அகமது பட்டேலும் போட்டியிட்டனர்.
இதற்கிடையே குஜராத் சட்டசபையில் நேற்று நடந்த மாநிலங்களவை உறுப்பினருக்கான தேர்தலில், ராஜினாமா செய்த 6 எம்.எல்.ஏ.க்கள் தவிர மீதமுள்ள 176 எம்.எல்.ஏக்களும் வாக்களித்தனர். ஆனால், காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க.வினர் மாறி மாறி தேர்தல் அதிகாரியிடம் புகார் செய்து வந்ததால், வாக்கு எண்ணிக்கை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
இறுதியில், பா.ஜ.க.வுக்கு வாக்களித்த இரண்டு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் ஓட்டு செல்லாது என தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.
இதையடுத்து, காங்கிரஸ் வேட்பாளர் அகமது படேல் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், அகமது படேலுக்கு எதிராக வாக்களித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை கட்சியிலிருந்து நீக்கி காங்கிரஸ் தலைமை உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக, மாநில காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் மணீஷ் தோஷி கூறுகையில், “அகமது படேலுக்கு எதிராக வாக்களித்த முன்னாள் காங்கிரஸ் தலைவர் சங்கர்சிங் வகேலா உள்பட 8 எம்.எல்.ஏ.க்களை கட்சியில் இருந்து நீக்க காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உத்தரவிட்டுள்ளார். அதன்படி, அடுத்த 6 ஆண்டுகளுக்கு அவர்கள் அனைவரும் கட்சியில் இருந்து நீக்கி வைக்கப்படுகின்றனர்’’ என தெரிவித்துள்ளார்.