கை சிதைந்த நெல்லை பாக்கியலட்சுமிக்கு ரூ. ஒரு லட்சம் நிவாரணம் - முதலமைச்சர் பழனிசாமி

குப்பை பிரித்தெடுக்கும் இயந்திரத்தில் மாட்டி கை சிதைந்த தூய்மை பணியாளர்பாக்கியலட்சுமிக்கு ஒரு லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி
Published on

சென்னை:

நெல்லை மேலப்பாளையம் பாரதியார் தெருவை சேர்ந்தவர் பழனிச்சாமி மனைவி பாக்கியலட்சுமி (35). இவர் பாளையங்கோட்டை என்.ஜி.ஓ. காலனியில் மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டு உள்ள இயற்கை உரம் தயாரிப்பு மையத்தில் மகளிர் சுயஉதவிக்குழு மூலம் ஒப்பந்த தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.

கடந்த 28-ம் தேதி பாக்கியலட்சுமி, மக்கும் குப்பையை தனியாக பிரித்து எந்திரத்தில் போட்டு அரைத்துக் கொண்டிருந்தார். திடீரென்று அவரது வலது கை எந்திரத்தில் சிக்கி துண்டானது. இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் பாக்கியலட்சுமியை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து பழனிச்சாமி பெருமாள்புரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே,  கை துண்டித்த பாக்கியலட்சுமி குடும்பத்துக்கு நிவாரணம் வழங்கக் கோரி நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.

இந்நிலையில், குப்பை பிரித்தெடுக்கும் இயந்திரத்தில் மாட்டி கை சிதைந்த தூய்மை பணியாளர் பாக்கியலட்சுமிக்கு ஒரு லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும். பாக்கியலட்சுமியின் மருத்துவ செலவு முழுவதையும் அரசே ஏற்கும் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com