

தமிழகம் முழுவதும் அதிமுக அரசின் சார்பில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா இன்று நடைபெற்றது. இதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார். மேலும், ரூ 389 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி. அப்போது அவர் பேசியதாவது:
அமரர் சிவந்தி ஆதித்தனாருக்கு திருச்செந்தூரில் மணி மண்டபம் கட்டப்படும். 2018-19-ம் ஆண்டில் மணி மண்டபம் கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்படும்.
தூத்துக்குடி மாநகராட்சியின் 4-வது குடிநீர் திட்டம் ரூ. 282 கோடி மதிப்பீட்டில் துவங்கப்பட்டுள்ளது. திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத மாவட்டமாக தூத்துக்குடி விளங்குகிறது.
முட்டை விவகாரத்தில் ஸ்டாலின் உண்மைக்கு மாறாக பேசி வருகிறார். சத்துணவில் முட்டை வழங்குவது ஒருநாளும் நிறுத்தப்படாது. அ.தி.மு.க.வின் ஒரு தொண்டனைக்கூட தொட்டுப்பார்க்க முடியாது. தினமும் ஏதாவது ஒரு பொய்யை ஸ்டாலின் சொல்லிக்கொண்டிருக்கிறார்.