ஐதராபாத்தில் 11 கிலோ தங்கம், ரூ.1.5 கோடி வெளிநாட்டு பணத்துடன் பெண் கைது
ஐதராபாத்:
வெளிநாடுகளில் இருந்து ரகசியமாக தங்கம் கடத்தி வருவது நாளுக்குநாள் அதிகரித்துவரும் நிலையில் நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவ்வகையில், ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி பன்னாட்டு விமான நிலையத்தில் இன்று பயணிகள் உடமைகளை பரிசோதனை செய்த அதிகாரிகள் வெளிநாட்டில் இருந்து வந்திறங்கிய ஒரு பெண்ணின் நடத்தை சந்தேகத்துக்கிடமான முறையில் இருப்பதை கண்டனர்.
அவர் கொண்டு வந்திருந்த உடைமைகளை தீவிரமாக பரிசோதித்தபோது சுமார் ரூ.3.6 கோடி மதிப்பிலான 11.1 கிலோ தங்கத்தை கடத்தி வந்தது தெரியவந்தது. இதைதொடர்ந்து அந்தப் பெண்ணை கைது செய்த போலீசார் அவர் வாடகைக்கு எடுத்திருந்த ஓட்டல் அறைக்கு சென்று சோதனை செய்தனர்.
அங்கு ஒரு பெட்டியில் கட்டுக்கட்டாக வெளிநாட்டு பணத்தை அவர் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சுமார் 5 கோடி மதிப்பிலான தங்கமும் வெளிநாட்டுப் பணமும் அவருக்கு எப்படி கிடைத்தது? யாருக்காக இவற்றை கொண்டு வந்தார்? என்பது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

