

ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது.
விசாரணை கமிஷன் அலுவலகம் செயல்படும் சென்னை எழிலகம் அலுவலகத்தில் மருத்துவர்கள், ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளித்த அரசு டாக்டர்கள், குழுவில் இருந்தவர்கள் என இதுவரையில் 15 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
விசாரணை கமிஷனில் ஆஜராகும்படி சசிகலாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அவர் ஆஜராவரா? அவரது சார்பில் வக்கீல் மூலம் விளக்கம் சமர்ப்பிக்கப்படுமா? என்பது தெரியவில்லை.
இந்த நிலையில் ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளித்த குடும்ப டாக்டர் சிவக்குமார் இன்று காலை 10.25 மணிக்கு நீதிபதி ஆறுமுகசாமி முன்னிலையில் ஆஜரானார். அவரிடம் நீதிபதி பல்வேறு விளக்கங்களை கேட்டறிந்தார்.
ஜெயலலிதாவிற்கு அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்படுவதற்கு முன்பு என்ன மாதிரியான சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அளிக்கப்பட்ட சிகிச்சைகள் என்ன? என்று கேட்டார். அவரை வெளிநாட்டிற்கு ஏன் சிகிச்சைக்காக அழைத்து செல்லவில்லை. அதற்கான காரணம் என்ன? என்றும் நீதிபதி டாக்டர் சிவக்குமாரிடம் கேள்வி எழுப்பினார்.