search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாட்டுக்கோழி பண்ணை அமைக்க மானியம் பெற விண்ணப்பிக்கலாம்
    X

    கலெக்டர் சாரூஸ்ரீ

    நாட்டுக்கோழி பண்ணை அமைக்க மானியம் பெற விண்ணப்பிக்கலாம்

    • பயனாளியே கோழி வளர்ப்பு மற்றும் சந்தைப்படுத்துதல் ஆகியவற்றை கவனித்துக்கொள்ள முடியும்.
    • அரசு வழங்கிய கோழி வளர்ப்பு திட்டத்தில் பயனடைந்தவராக இருத்தல் கூடாது.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது:-

    2023-24-ம் ஆண்டிற்கான கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீன்வளத்துறையின் மானியக்கோரி க்கையின்போது, தமிழ்நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டங்களில் கிராமப்புறங்களில் சிறிய அளவிலான 100 நாட்டுக்கோழி பண்ணை அலகுகள் நிறுவ 50 சதவீதம் மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்திட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    நாட்டுக்கோழிகள் வளர்ப்பதில் ஆர்வமும் திறனும்கொண்ட கிராமப்புற பயனாளிகளுக்கு சிறிய அளவிலான (250 கோழிகள் அலகு) நாட்டுக்கோழி பண்ணை அலகுகள் நிறுவ 50 சதவீதம் மானியம் வழங்கிட திட்டத்தினை செயல்படுத்திட தேவையான கோழி கொட்டகை, கட்டுமானச்செலவு, உபகரணங்கள் வாங்கும் செலவு (தீவனத்தட்டு) மற்றும் தண்ணீர் வைக்கும் தட்டு, குஞ்சு பொறிப்பான் மற்றும் 4 மாதங்களுக்கு தேவையான தீவன செலவு (கோழி வளரும் வரை) ஆகியவற்றிற்கான மொத்த செலவில் 50 சதவீதம் மானியமாக ரூ.1,50,625 வழங்கப்படவுள்ளது.

    ஒவ்வொரு பயனாளிக்கும் 250 நாட்டுக்கோழிகள் 4 வார வயதுடைய நாட்டுக்கோழி குஞ்சுகள் ஓசூர் மாவட்ட அரசு கால்நடை பண்ணையில் இருந்து இலவசமாக வழங்கப்படும்.

    இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் கிராமப்புற பயனாளிகள் இத்திட்டத்தின் மீதமுள்ள 50 சதவீதம் பங்களிப்பை வங்கிக்கடன் மூலமாகவோ அல்லது தனது சொந்த ஆதாரங்கள் மூலமாகவோ திரட்ட வேண்டும். நாட்டுக்கோழி இறைச்சி மற்றும் முட்டைகளுக்கு தமிழகம் முழுவதும் நல்ல சந்தை இருப்பதால் பயனாளியே கோழி வளர்ப்பு மற்றும் சந்தைப்படுத்துதல் ஆகியவற்றை கவனித்துக்கொள்ள இயலும்.

    இத்திட்டத்தில் சேர விரும்பும் பயனாளிகளுக்கு கோழி கொட்டகை கட்ட குறைந்தபட்சம் 625 சதுர அடி நிலம் இருக்க வேண்டும். இந்தப்பகுதி மனித குடியிருப்புகளிலிருந்து விலகி இருக்க வேண்டும். பயனாளி தொடர்புடைய கிராமத்தில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும். விதவைகள், ஆதரவற்றோர், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். தேர்ந்தெடுக்கப்படும் பயனாளிகளில் 30 சதவீதம் தாழ்த்தப்பட்ட பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். இதற்கு முன்னர் அரசு வழங்கிய கோழி வளர்ப்புத்திட்டத்தில் பயனடைந்தவராக இருத்தல் கூடாது. மேலும், பயனாளி கோழிப்பண்ணையை தொடர்ந்து, 3 வருடங்களுக்கு குறையாமல் பராமரிக்க உத்திரவாதக் கடிதம் அளிக்க வேண்டும்.

    இத்திட்டத்தின்மூலம் நாட்டுக்கோழிகளை 72 வாரங்கள் வளர்த்து 140 முட்டைகள் வீதம் வருடத்திற்கு 17500 முட்டைகள் வரை உற்பத்தி செய்ய இயலும். இதில் சுமார் 2000 முட்டைகளை குஞ்சுப்பொறிப்பதற்கு பயன்படுத்திக்கொண்டு மீதமுள்ள முட்டைகளையும் மற்றும் வளர்ந்த சேவல்களையும் இறைச்சிக்காக விற்பனை செய்வதன் மூலமாக ஒரு வருடத்திற்கு ரூ.2.00 லட்சம் வரை வருமானம் ஈட்ட முடியும்.

    எனவே, இத்திட்டத்தில் சேர விருப்பமுள்ள பயனாளிகள் தங்கள் கிராமத்திற்கு அருகிலுள்ள அரசு கால்நடை மருந்தகத்தை அணுகி விண்ணப்பம் பெற்று பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை உரிய ஆவணங்களுடன் 25.6.23-க்குள் கால்நடை மருந்தகத்தில் ஒப்படைத்திடுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×