search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாழடைந்து கிடக்கும் அமராவதி அணை பூங்கா  பராமரிக்கப்படுமா?
    X

    பாழடைந்து கிடக்கும் அமராவதி அணை பூங்கா பராமரிக்கப்படுமா?

    • சுற்றுலாத்துறையினர் செல்பி எடுப்பதுடன் தங்கள் கடமையை முடித்துக்கொள்கின்றனர்.
    • சுற்றுலா பயணிகளுக்காக வனத்துறை சார்பில் முதலை பொங்கல் விழாவும் சில முறை கொண்டாடப்பட்டது.

    உடுமலை :

    உடுமலை அருகே மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இயற்கை எழில் சூழ்ந்த பகுதியாக அமராவதி அணையும், அதையொட்டிய பூங்காவும் அமைந்துள்ளது.பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பிற மாநிலங்களைச்சேர்ந்த சுற்றுலா பயணிகளும், அமராவதி அணை பூங்காவுக்கு சென்று விட்டு கேரள மாநிலம் மூணாறு, மறையூர் போன்ற சுற்றுலா தலங்களுக்கு செல்வது வழக்கம்.

    அதிக சுற்றுலா பயணிகள் வருகையால் அப்பகுதியில், முதலைப்பண்ணை, அரிய வகை கள்ளிச்செடிகளை உள்ளடக்கிய கள்ளிப்பூங்கா, உயிரியல் பூங்கா, மலைவாழ் மக்களுக்கான விற்பனையகம் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா அம்சங்கள் மேம்படுத்தப்பட்டது.அணையில், படகு சவாரியும் துவக்கப்பட்டது. சுற்றுலா பயணிகளுக்காக வனத்துறை சார்பில் முதலை பொங்கல் விழாவும் சில முறை கொண்டாடப்பட்டது.

    இவ்வாறு வார விடுமுறை நாட்களிலும் கோடை விடுமுறையின் போதும் பிசியாக இருந்த அமராவதி அணை மற்றும் பூங்கா தற்போது எட்டிப்பார்க்க ஆளில்லாமல் பரிதாப நிலையில் உள்ளது.ஏனென்றால், பூங்காவில் பசுமை காணாமல் போய் நீருற்றுகள், நடைபாதை, சிலைகள் அனைத்தும் உடைந்து உள்ளே செல்லவே பயப்பட வேண்டியுள்ளது.உயிரியல் பூங்காவில், பறவைகள், விலங்குகள் எதுவும் இல்லாமல் வெறும் கட்டடம் மட்டுமே காணப்படுகிறது. சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் துருப்பிடித்து மாயமாகி உள்ளது.இருக்கைகளுக்கும் இதே நிலையிலேயே காணப்படுகிறது. இவ்வாறு பூங்கா என்பதற்கான அடையாளத்தை அமராவதி அணை பூங்கா இழந்து விட்டது.அணைப்பூங்காவை பராமரித்து மேம்படுத்த வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

    குறிப்பிட்ட இடைவெளியில் பொதுப்பணித்துறைக்கு ஒதுக்கப்படும் குறைந்தளவு நிதியிலும் எவ்வித முறையான பணிகளும் மேற்கொள்ளப்படுவதில்லை.ஒவ்வொரு முறையும் அமராவதிக்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பிய சுற்றுலா பயணிகள் தற்போது அப்பகுதிக்கு செல்வதை தவிர்த்து விடுகின்றனர். இதனால் அமராவதி அணை பூங்கா ஆளில்லா சுற்றுலா தலமாக மாறி விட்டது.பல முறை அமராவதி அணையிலும், பூங்காவிலும் ஆய்வு செய்த சுற்றுலாத்துறையினர் செல்பி எடுப்பதுடன் தங்கள் கடமையை முடித்துக்கொள்கின்றனர்.

    பெருந்தொற்று காலத்துக்குப்பிறகு வரும் இந்த கோடை விடுமுறையில் சுற்றுலா பயணிகள் அமராவதி அணை பூங்காவுக்கு அதிகம் வர வாய்ப்புள்ளது.அதற்குள்ளாக பொதுப்பணித்துறையினரும், சுற்றுலாத்துறையினரும், சுற்றுலா பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்த வேண்டும் என தமிழக முதல்-அமைச்சருக்கு அப்பகுதி மக்கள் மனு அனுப்பியுள்ளனர்.

    Next Story
    ×