வாகனங்களை வழிமறித்த காட்டுயானை: ஆபத்தை உணராமல் செல்பி எடுத்த வாகன ஓட்டிகள்

ஆபத்தை உணராமல் யானை அருகே சென்று செல்பி எடுத்தனர்.யானையை நீண்ட போராட்டத்திற்கு பிறகு வனப்பகுதிக்குள் விரட்டி விட்டனர்.
வாகனங்களை வழிமறித்த காட்டுயானை: ஆபத்தை உணராமல் செல்பி எடுத்த வாகன ஓட்டிகள்
Published on

அந்தியூர்:

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, புலி, சிறுத்தை, காட்டெருமை, மான், கரடி உள்பட ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன.

குறிப்பாக யானைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன. யானைகள் அவ்வப்போது வனப்பகுதி விட்டு வெளியேறி சாலையில் சுற்றி வருவதும், சிலசமயம் கிராமத்துக்குள் புகுந்து விளை நிலங்களை சேதப்படுத்துவதும் தொடர்கதையாகி வருகிறது.

இந்நிலையில் அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டுயானை ஒன்று தேவர் மலையில் இருந்து தாமரை கரை செல்லும் சாலையில் சுற்றித் திரிந்து கொண்டிருந்தது.

அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்கள் யானையை பார்த்ததும் அச்சத்தில் வாகனங்களை நிறுத்திவிட்டு யானை வனப்பகுதிக்குள் செல்லும் வரை அங்கேயே நின்று கொண்டிருந்தனர்.

யானை வனப்பகுதிக்குள் செல்லாமல் நீண்ட நேரமாக சாலையிலேயே நின்று கொண்டு இருந்தது. இந்நிலையில் அங்கு நின்று கொண்டிருந்தவர்கள் ஆபத்தை உணராமல் யானை அருகே சென்று செல்பி எடுத்தனர்.

இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறையினர் விரைந்து வந்து சாலையில் நின்று கொண்டிருந்த யானையை நீண்ட போராட்டத்திற்கு பிறகு வனப்பகுதிக்குள் விரட்டி விட்டனர்.

இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் யானை அருகே நின்று செல்பி எடுத்த நபர்களை வனத்துறையினர் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com