search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் அதிகாலையில் இடி- மின்னலுடன் பரவலாக மழை
    X

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் அதிகாலையில் இடி- மின்னலுடன் பரவலாக மழை

    • நெல்லை மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது.
    • சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலத்தின் கீழ் பகுதிகளில் மழைநீர் தேங்கி கிடந்தது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று அதிகாலை திடீரென கனமழை பெய்தது.

    நெல்லை

    நெல்லை மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் விட்டு விட்டு பெய்த மழையால் அணை களுக்கு நீர்வரத்து ஏற்பட்டது. பிரதான அணையான 143 அடி கொள்ளவு கொண்ட பாப நாசம் அணையின் நீர்மட்டம் 85 அடியை கடந்துள்ளது.

    இன்று காலை நிலவரப்படி அந்த அணைக்கு 348 கனஅடி நீர் வினாடிக்கு வந்து கொண்டிருக்கிறது. சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 96.52 அடியும், மணிமுத்தாறில் 54.12 அடியும் நீர் இருப்பு உள்ளது. இதனால் மாவட்டம் முழுவதும் பிசான பருவ சாகுபடி பணிகள் முழுவீச்சில் தொடங்கி நடைபெற்று வருகிறது. அணை பகுதிகளை பொறுத்தவரை பாபநாசம் மற்றும் கொடு முடியாற்றில் தலா 6 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    மாவட்டத்தில் இன்று அதிகாலை 5 மணிக்கு தொடங்கி சுமார் 1 மணி நேரம் பலத்த மழை பெய்தது. சேரன்மகாதேவி, முக்கூடல், அம்பை, களக்காடு, மூலக்கரைப்பட்டி, ராதாபுரம், நாங்குநேரி, சீதபற்பநல்லூர், சுத்தமல்லி உள்ளிட்ட இடங்களில் பலத்த மழை பெய்தது. மாநகரிலும் அதேபோல் அதிகாலையில் சுமார் அரை மணி நேரம் பெய்த பலத்த மழையால் சாலைகளில் மழைநீர் தேங்கி கிடந்தது. டவுன் வடக்கு ரதவீதி, சொக்கப்பனை முக்கில் இருந்து நெல்லையப்பர் கோவிலுக்கு செல்லும் பகுதி, டவுன் பாரதியார் தெரு, சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலத்தின் கீழ் பகுதிகளில் மழைநீர் தேங்கி கிடந்தது. அதனை மின் மோட்டார் மூலம் வெளி யேற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.

    மாவட்டத்தில் அதிகபட்ச மாக நாங்குநேரி யில் 15.6 மில்லிமீட்டரும், மூலக்கரைப் பட்டியில் 12 மில்லிமீட்டரும், ராதாபுரத்தில் 10 மில்லி மீட்டரும், அம்பையில் 5 மில்லி மீட்டரும்,சேரன்மகாதேவி, களக்காட்டில் தலா 8 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது. மாநகரில் நெல்லை யில் 5.6 மில்லிமீட்டர், பாளையில் 2 மில்லிமீட்டரும் மழை பெய்தது. அதேநேரத்தில் மழையின் காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    தென்காசி

    தென்காசி மாவட்டத்திலும் இன்று அதிகாலை 5 மணி முதல் சுமார் 1 மணி நேரம் திடீரென கனமழை பெய்தது. ஆலங்குளம், பாவூர்சத்திரம், கடையம், ஆழ்வார்குறிச்சி, செங்கோட்டை, தென்காசி, ஆய்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்ததால் சாலையோர பள்ளங்களில் மழைநீர் தேங்கி கிடந்தது. அதிகாலை பெய்த மழையினால், மாவட்டம் முழுவதும் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.

    செங்கோட்டையில் 11 மில்லிமீட்டரும், தென்காசியில் 9 மில்லிமீட்டரும், ஆய்குடியில் 3 மில்லிமீட்டரும் மழை பெய்தது.

    அணைகளை பொறுத்த வரை கருப்பாநதி, குணடாறு, அடவிநயினார் அணை பகுதிகளில் விட்டுவிட்டு மழை பெய்தது. குண்டாறு அணை தனது முழு கொள்ளளவான 36 அடியை எட்டி தொடர்ந்து நிரம்பி வழிந்து வருகிறது. அங்கு இன்று காலை வரை 6.2 மில்லிமீட்டர் மழை பெய்தது. கருப்பாநதியில் 2.5 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.

    மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்துவரும் லேசான மழையினால் குற்றா லத்தில் மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. இன்று விடுமுறை நாளையொட்டி அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

    தூத்துக்குடி

    தூத்துக்குடி, புதுக்கோட்டை யில் நேற்று இரவு முதல் இன்று காலை வரையிலும் கனமழை பெய்தது. இதன் காரணமாக ஆங்காங்கே சாலையோரங் களில் தண்ணீர் குளம்போல் தேங்கியது.அங்கு அதிகபட்ச மாக 6.1 மில்லிமீட்டர் மழை பெய்தது.

    உடன்குடி பகுதியில் நள்ளிரவில் இடி-மின்னலுடன் கனமழை பெய்தது. உடன்குடி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதியான குலசேகரன் பட்டினம், மணப்பாடு, சிறு நாடார் குடியிருப்பு, பெரிய புரம், மாதவன்குறிச்சி, தாண்ட வன்காடு, கொட்டங்காடு, செட்டியாபத்து, தண்டுபத்து, தைக்காவூர், நயினார்பத்து, சீர்காட்சி, பிச்சிவிளை, பரமன்குறிச்சி, லட்சுமிபுரம், வாகை விளை, வேப்பங்காடு மற்றும் சுற்றுப்புற பகுதியில் இன்று அதிகாலை 1 மணி அளவில் இடி - மின்னலுடன் மழை விட்டு விட்டு பெய்தது.

    இதனால் ஆங்காங்கே முக்கியமான ரோடுகளிலும், தெருக்களிலும் மழைநீர் தேங்கியது. இந்த ஆண்டு தற்போதுதான் மழை பெய்து இருப்பதாகவும், இதுவரை மழை பெய்யவில்லை என்றும், இதைப் போல அடிக்கடி மழை பெய்து இப்பகுதியில் உள்ள அனைத்து நீர்நிலைகளுக்கும் தண்ணீர் வர வேண்டும் என்றும் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் கூறினர்.

    கயத்தாறு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் அதிகாலையில் சுமார் 17 மில்லிமீட்டர் மழை பெய்தது. காயல்பட்டினத்தில் 20 மில்லிமீட்டர் மழை பதிவானது. திருச்செந்தூர், சாத்தான்குளம், ஸ்ரீவைகுண்டம், காடல்குடி உள்ளிட்ட இடங்களிலும் பரவலாக பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    Next Story
    ×