search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதிய பஸ் நிலையம் அமைக்க கோரிக்கை
    X

    புதிய பஸ் நிலையம் அமைக்க கோரிக்கை

    • ஸ்ரீவில்லிபுத்தூரில் புதிய பஸ் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • போதிய இடவசதி இல்லாததால் பஸ்கள் ஒன்றன் பின் ஒன்றாக வரிசை கட்டி நிற்கின்றன.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் மையப்பகுதியில் 1985-ம் ஆண்டு 2 ஏக்கர் பரப்பளவில் 50 பஸ்கள் நிற்கும் வகையில் பஸ் நிலையம் கட்டப்பட்டது. தற்போது இங்கு மதுரை, சென்னை, திருச்சி, நெல்லை, தென்காசி, தேனி, கோவை உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்கள், நகர பஸ்கள் என தினசரி நூற்றுக்கணக்கான பஸ்கள் வந்து செல்கின்றன. போதிய இடவசதி இல்லாததால் பஸ்கள் ஒன்றன் பின் ஒன்றாக வரிசை கட்டி நிற்கின்றன.

    ஆண்டாள் கோவில், சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில், திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோவில், பிளவக்கல் அணை, செண்பக தோப்பு உள்ளிட்ட இடங்களுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்க ணக்கான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இந்நிலையில் பஸ் நிலையத்தில் பஸ் நுழைவு கட்டணம், கடைகளின் வாடகை என மாதம் பல லட்சம் வருவாய் வந்தாலும் கழிப்பறை, காத்திருப்பு அறை, வாகன காப்பகம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.

    நகரின் மையப்பகுதியில் பஸ் நிலையம் அமைந்துள்ள தால் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆடிப்பூரத் தேரோட்டம், திருக்கல்யாணம், திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோவில் புரட்டாசி உற்சவம் உள்ளிட்ட விழா காலங்களில் போக்குவரத்து மாற்றம் செய்ய முடியாமல் விழாக்காலங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

    பஸ் நிலையம் அருகில் அரசு மருத்துவமனை, மார்க்கெட், கடை வீதிகள், வணிக நிறுவனங்கள் உள்ளன. மார்க்கெட், வணிக நிறுவனங்களுக்கு வரும் சரக்கு வாகனங்களை சாலையில் நிறுத்துவதால் இப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் நகர் பகுதியில் போக்குவரத்து நெருக்கடியை குறைக்கும் வகையில் பஸ்கள் வரும் வழி ஒரு வழிப்பாதையாக மாற்றம் செய்யப்பட்டது.

    மதுரையில் இருந்து வரும் பஸ்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் சர்ச் நிறுத்தத்தில் இருந்து நேதாஜி சாலை வழியாக பஸ் நிலையம் வந்து, பின் திருவண்ணாமலை சாலை வழியாக ராமகிருஷ்ணா புரம் சென்று மீண்டும் சர்ச் வழியாக ராஜபாளையம் செல்கிறது. இதனால் நேதாஜி சாலை, திருவண்ணாமலை சாலை, ராமகிருஷ்ணாபுரம், பென்னிங்கடன் மார்க்கெட், அரசு மருத்துவமனை, சின்னக்கடை பஜார் உள்ளிட்ட முக்கிய சாலை கள் நெரிசலில் சிக்கி தவிக்கின்றன.

    ஸ்ரீவில்லிபுத்தூர்-சிவகாசி சாலையில் நகராட்சி குப்பை கிடங்கு அருகில் புதிய பஸ் நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டது. ஆனால் நிதி ஒதுக்கீடு செய்யாததால் பஸ் நிலையம் கட்டப்படவில்லை. தற்போது திருமங்கலம் - கொல்லம் தேசிய நெடுஞ்சாலைக்கான பூர்வாங்க பணிகள் முடிவடைந்து விரைவில் பணிகள் தொடங்க உள்ளன.

    ஸ்ரீவில்லிபுத்தூரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், 4வழிச்சாலை அருகே போதிய அடிப்படை வசதிகளுடன் புதிய பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×