search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேனி மாவட்டத்தில் விநாயகர் ஊர்வலத்தில் விதி மீறினால் நடவடிக்கை
    X

    கோப்பு படம்.

    தேனி மாவட்டத்தில் விநாயகர் ஊர்வலத்தில் விதி மீறினால் நடவடிக்கை

    • மின்சாரம் பெறப்படும் முறை குறித்து மின்சார வாரியத்திடம் தடையில்லாச் சான்று போன்ற பல்வேறு தடையின்மை சான்றுகளை பெற வேண்டும்
    • சிலைகள் அமைக்கப்பட்டுள்ள இடத்தில் காலையில் 2 மணி நேரம் மற்றும் மாலை 2 மணி நேரம் மட்டுமே ஒலிபெருக்கிகளை பயன்படுத்தப்பட வேண்டும்.

    தேனி:

    தேனி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவின் போது வைக்கப்படும் விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான மாசு கட்டுப்பாடு வாரிய வழிகாட்டுதல்களின்படி மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் கரைத்து, சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும். மேலும், விதிகளை மீறுவோர் மீது அபராதம் விதிக்கப்படும் என மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

    விநாயகர் சிலை அமைப்பதற்கு வருவாய் கோட்டாட்சியரிடம் அனுமதி சான்று, சிலை வைக்கப்படும் இடம் குறித்து தனியார்,அரசு,உள்ளாட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறையிடம் தடையில்லா சான்று, ஒலிபெருக்கி அமைப்பது தொடர்பாக தடையில்லாச் சான்று, தற்காலிக அமைப்புகள் தீயணைப்புத்துறையின் விதிமுறைகளின்படி அமைக்கப்பட்டுள்ளதற்கான தடையில்லாச் சான்று, சட்ட விரோத மின் இணைப்பு இருக்க கூடாது என்பதற்காக மின்சாரம் பெறப்படும் முறை குறித்து மின்சார வாரியத்திடம் தடையில்லாச் சான்று போன்ற பல்வேறு தடையின்மை சான்றுகளை பெற வேண்டும்

    பீடம் மற்றும் சிலையுடன் மொத்த உயரம் 10 அடிக்கு மேலாக இருக்க கூடாது. பிற வழிபாட்டுத் தலங்கள், ஆஸ்பத்திரிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் அருகில் சிலைகள் அமைக்கக் கூடாது. களிமண்ணால் மட்டுமே சிலைகள் செய்யப்பட வேண்டும். சிலைகள் அமைக்கப்பட்டுள்ள இடத்தில் காலையில் 2 மணி நேரம் மற்றும் மாலை 2 மணி நேரம் மட்டுமே ஒலிபெருக்கிகளை பயன்படுத்தப்பட வேண்டும்.

    விநாயகர் சிலைகள் வைத்து வழிபடும் இடங்களில் சட்டத்திற்குப் புறம்பான செயல்கள் நடைபெறா வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும். சிலை அமையும் இடத்தில் அரசியல் கட்சியினரின் பெயர் பலகைகள் வைக்க கூடாது. சிலை வைத்திருக்கும் பொழுது எந்த அமைப்பின் மூலம் வைக்கப்படுகிறதோ அந்த அமைப்பினைச் சேர்ந்த 2 நபர்கள் சுழற்சி முறையில் பணியில் இருக்க வேண்டும். பிற மத வழிபாட்டுத் தலங்களின் வழியே விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் செல்ல கூடாது.

    ரசாயன கலவையற்ற சிலைகளை பயன்படுத்தவேண்டும். சிலைகளை கரைப்பதற்கு முன்பாக மாலைகள், வஸ்திரங்கள் அலங்கார பொருட்களை அப்புறப்படுத்தி, கரைக்கப்படும் இடங்களில் வைக்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டிகளில் மட்டும் போட வேண்டும். விதிகளை மீறுவோர்மீது அபராதம் விதிக்கப்படும்.

    விநாயகர் சிலைகளை பெரியகுளத்தில் பாலசுப்பிரமணியன் கோவில் அருகில் உள்ள வராகநதி, உத்தமபாளையத்தில் ஞானம்மாள் கோவில் அருகில் உள்ள முல்லைப்பெரியாறு, கம்பம் சுருளிப்பட்டி ரோடு அருகில் உள்ள முல்லைப்பெரியாறு, சின்னமனுார்-மார்கையன்கோட்டை பாலம் அருகில் உள்ள முல்லைபெரியாறு, தேனி அரண்மனைப்புதுார் பாலம் அருகில் உள்ள முல்லைபெரியாறு, ஆண்டிபட்டி-பெரியகுளம் சாலையில் உள்ள வைகை ஆறு, வருசநாடு அருகில் உள்ள மொட்டப்பாறை செக்டேம், போடி பகுதியில் உள்ள கொட்டக்குடி (புதூர்) ஆகிய பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் மட்டுமே விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×