சோளாபுரி அம்மன் கோவில் உற்சவத்தை தனித்தனியாக நடத்த முடிவு

அமைதி கூட்டம் நடந்தது திருவிழா பிரச்சினை முடிவுக்கு வந்தது
சோளாபுரி அம்மன் கோவில் உற்சவத்தை தனித்தனியாக நடத்த முடிவு
Published on

வேலூர்:

வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே கிராம தேவதையான செல்லியம்மன் கோவில் தோட்டப்பாளையத்தில் கிராம தேவதையான சோளாபுரி அம்மன் கோவில் உள்ளது.

ஆண்டுதோறும் ஆடி மாதம் 3-வது வெள்ளிக்கிழமை அடுத்த செவ்வாய்க்கிழமை சோளாபுரி அம்மனுக்கு உற்சவம் நடைபெறும்.இந்த உற்சவத்தின் போது செல்லியம்மன் கோவிலில் இருந்து உற்சவர் அலங்கரிக்கப்பட்டு வீதி உலா செல்வது வழக்கம்.

இந்த நிலையில் சோளாபுரி அம்மன் கோவில் புதுப்பிக்கப்பட்ட நிலையில் அங்கு போதுமான அளவுக்கு இட வசதி உள்ளதால் அங்கிருந்தே உற்சவர் அலங்கரித்து வீதி உலா செல்ல வேண்டும் என்று ஒரு தரப்பினர் தெரிவித்தனர். ஆனால் வழக்கமான நடைமுறையில் சோளாபுரி அம்மன் உற்சவம் நடக்க வேண்டும் என்று மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதன் காரணமாக இந்த கோவில் திருவிழா நடத்துவதில் சிக்கல் நீடித்தது. இது தொடர்பாக வேலூர் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் செந்தில் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் ஆகியோர் முன்னிலையில் அமைதி கூட்டம் நேற்று நடந்தது.

இதில் இருதரப்பினரும் சோளாபுரி அம்மன் உற்சவத்தை தனித்தனியாக நடத்துவதற்கு விருப்பம் தெரிவித்தனர். அதன்பேரில் வழக்கமான முறையில் செல்லியம்மன் கோவிலில் இருந்து தொடங்கும் உற்சவம் வரும் 12-ந் தேதியும், சோளாபுரி அம்மன் கோவிலில் இருந்து தொடங்கும் உற்சவம் வருகிற 16-ந் தேதி நடத்திக் கொள்வது என்று முடிவு செய்யப்பட்டது

இதில் இருதரப்பினருக்கும் இடையே உடன்பாடும் ஏற்பட்டதால் சோளாபுரி அம்மன் கோவில் பிரச்சனை முடிவுக்கு வந்தது.

X

Maalai Malar
www.maalaimalar.com