

குடியாத்தம்:
குடியாத்தம் தாலுகா அலுவலகத்தில் இந்த பசலி ஆண்டிற்கான ஜமாபந்தி நிகழ்ச்சி நேற்று தொடங்கியது. நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி தலைமை தாங்கினார். தாசில்தார் லலிதா, நெடுமாறன், துணை தாசில்தார்கள் குமார், வேல்முருகன், வருவாய் ஆய்வாளர்கள் மஞ்சுநாதன், கார்த்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில் அமலுவிஜயன், எம்.எல்.ஏ, குடியாத்தம் நகர மன்ற தலைவர் எஸ்.சவுந்தரராசன், குடியாத்தம் ஒன்றிய குழு தலைவர் என்.இ. சத்யானந்தம் ஆகியோர் கலந்து கொண்டனர். முதல் நாளான நேற்று பரதராமி, குடியாத்தம் நகரம், பிச்சனூர், கொண்டசமுத்திரம், செதுக்கரை, தாட்டிமானபல்லி, கல்லப்பாடி, ராமாலை, புட்டவாரிபல்லி, டி.பி.பாளையம், ரங்கசமுத்திரம், வீரிசெட்டிபல்லி, வரதாரெட்டிபல்லி, வி.டி.பாளையம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், பல்வேறு நலத்திட்ட உதவிகளை கேட்டும் 191 பேர் மனு அளித்தனர்.
குடியாத்தம் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கு பொது மக்களுக்கு வசதிக்கு ஏற்ப 3 இடங்களை தேர்வு செய்து அந்த இடங்களில் ஏதாவது ஒன்றில் சார்பதிவாளர் அலுவலகம் கட்ட ஆவண செய்யுமாறு குடியாத்தம் அமலுவிஜயன் எம்.எல்.ஏ.விடம் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி மனுஅளித்தார்.
இந்நிகழ்ச்சியில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஜெயமுருகன், ரகு, சசிகுமார், வெங்கடாஜலபதி உட்பட பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.
பேரணாம்பட்டு தாலுக்காவில் பேரணாம்பட்டு, மேல் பட்டி ஆகிய 2 உள் வட்டங்களுக்கான ஜமாபந்தி நிகழ்ச்சி நேற்று தொடங்கப்பட்டது.
பேரணாம்பட்டு தாலுக்கா அலுவலகத்தில் குடியாத்தம் சப் கலெக்டர் தனஞ்செயன் தலைமையில் ஜமாபந்தி நடைபெற்றது. தாசில்தார் வெங்கடேசன் முன்னிலை வகித்தார் நிகழ்ச்சியில் பேரணாம்பட்டு பகுதியில் இலவச கைப்பற்று நிலத்திற்கான பட்டாக்கள் வழங்க கோரியும், மற்றும் வீட்டு மனைப் பட்டா, முதியோர் உதவி தொகை, பட்டா மாற்றம், தொகுப்பு வீடுகள் கேட்டு பொது மக்களிடமிருந்து மொத்தம் 86 மனுக்கள் பெறப்பட்டன.