பைக்-மொபட் மோதல்; 9 மாத பெண் குழந்தை பலி

4 பேர் படுகாயம் அடைந்தனர்போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
பைக்-மொபட் மோதல்; 9 மாத பெண் குழந்தை பலி
Published on

அணைக்கட்டு:

ஒடுகத்தூர் அடுத்த கெங்கசாணிகுப்பம், கொல்லைமேடு பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 27). இவரது மனைவி பத்மாவதி (23). தம்பதியினர் மகள் டஷ்திதா (9 மாதம்).

குழந்தை டர்ஷிதாவுக்கு வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தடுப்பூசி போட வேண்டியிருந்தது. இதற்காக வெங்கடேசன் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் ஒடுகத்தூரிலிருந்து வேலூர் நோக்கி பைக்கில் வந்தார்.

பத்மாவதியின் அக்கா மகள் மோனிதாஸ்ரீ (4) பைக்கின் முன்பக்கத்திலும், வெங்கடேசன் வண்டியை ஓட்ட பத்மாவதி குழந்தையுடன் பின் பக்கத்தில் அமர்ந்து சென்றனர்.

அப்போது அணைக்கட்டு அடுத்த நாராயணபுரம் அருகே சென்றபோது, எதிர் திசையில் வந்த பெண்ணின் மொபெட், பைக் மீது நேருக்கு நேர் மோதியது.

இதில் 9 மாத கைக்குழந்தை உள்பட 4 பேரும் படுகாயம் அடைந்தனர். இதனைப் பார்த்த அந்த பகுதி மக்கள், படுகாயம் அடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அணைக்கட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

பின்னர் குழந்தை டஷ்திதா மேல் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட வந்த நிலையில், குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தது.

இது குறித்து தகவல் அறிந்த அணைக்கட்டு போலீசார் குழந்தை உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 9 மாத குழந்தை உயிரிழந்த சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com