search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா: நாமக்கல் மாவட்டத்துக்கு 3-ந் தேதி உள்ளூா் விடுமுறை
    X

    கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா: நாமக்கல் மாவட்டத்துக்கு 3-ந் தேதி உள்ளூா் விடுமுறை

    • கொல்லிமலை வல்வில் ஓரி விழாவை முன்னிட்டு, வருகிற 3-ந் தேதி நாமக்கல் மாவட்டத்திற்கு உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
    • வருகிற 2-ந் தேதி மற்றும் 3-ந் தேதி ஆகிய 2 நாட்களில் வல்வில் ஓரி விழா கொண்டாடப்பட உள்ளது.

    நாமக்கல்:

    கொல்லிமலை வல்வில் ஓரி விழாவை முன்னிட்டு, வருகிற 3-ந் தேதி நாமக்கல் மாவட்டத்திற்கு உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா பிசிங் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

    கடையேழு வள்ளல்களில் ஒருவராகத் திகழ்ந்த வல்வில் ஓரி மன்னரின் வீரத்தினையும், கொடைத்தன்மையையும் போற்றும் வகையில், நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் 17, 18 ஆகிய இரு நாட்களில் அரசு சாா்பில் வல்வில் ஓரி விழா கொண்டாடப்படும்.

    அதன்படி நிகழாண்டில் வருகிற 2-ந் தேதி மற்றும் 3-ந் தேதி ஆகிய 2 நாட்களில் வல்வில் ஓரி விழா கொண்டாடப்பட உள்ளது.

    இவ்விழாவின்போது, தமிழக அரசின் பல்துறை பணிவிளக்கக் கண்காட்சி, பல துறைகளை ஒருங்கிணைத்து கலை நிகழ்ச்சிகள் மற்றும் மலா்க் கண்காட்சிகள், மூலிகைச் செடிகள் கண்காட்சி ஆகியவை நடைபெற உள்ளன.

    இவ்விழாவிற்காக மாவட்டத்திலுள்ள பொதுமக்கள், பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகள், அரசு அலுவலா்கள் மற்றும் பல்வேறு துறை பணியாளா்கள் குடும்பத்துடன் கொல்லிமலைப் பகுதிக்கு வருகை புரிந்து சிறப்பிக்க உள்ளதால், வருகிற 3-ந் தேதி (புதன்கிழமை) நாமக்கல் மாவட்டத்தில் செயல்படும் அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூா் விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது.

    மேலும், இந்த உள்ளூா் விடுமுறை நாளை ஈடுசெய்யும் வகையில் அடுத்த மாதம் 27-ந் தேதி (சனிக்கிழமை) அன்று பணி நாளாக அறிவிக்கப்படுகிறது.

    உள்ளூா் விடுமுறை நாளன்று மாவட்டத்தில் உள்ள கருவூலங்களும், சாா்நிலைக் கருவூலங்களும் அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களைக் கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளா்களோடு செயல்படும். மேலும், இந்த விடுமுறை வங்கிகளுக்கு பொருந்தாது.

    எனவே, கொல்லிமலையில் நடைபெறும் வல்வில் ஓரி விழாவிற்கு நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து துறை தலைவா்கள் மற்றும் பணிபுரியும் அனைத்து பணியாளா்களும் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×