search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காலியாக கிடக்கும் அடுக்குமாடி குடியிருப்புகள்
    X

    காலியாக கிடக்கும் அடுக்குமாடி குடியிருப்புகள்

    • பயனாளிகளை உறுப்பினர்களாக இணைத்து குடியிருப்பு நலச்சங் கங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
    • விரைவில் வீடுகளில் குடியேறி விடுங்கள் எனஅறிவுறுத்தி வருகிறோம்.

    திருப்பூர் :

    திருப்பூர் கலெக்டர் அலுவலக குறைகேட்பு கூட்டங்களின் போது மக்கள் அளிக்கும் மனுக்களில் பெரும்பாலானவை மனை மற்றும் குடியிருப்பு கோரிக்கையாகத்தான் இருக்கும். ஆயிரக்கணக்கில் மனுக்கள் அளிப்பவர்கள் இருந்தாலும் தங்களுக்கு எப்படியாவது குடியிருப்போ, மனையோ ஒதுக்கப்பட்டு விடாதா என்ற ஏக்கம் பலரது கண்களிலேயே தெரியும். இது யதார்த்தம் என்றாலும் திருப்பூர் மாவட்டத்தில் கட்டப்பட்டு பயனாளிகள் வசம் ஒப்படைக்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளில் 30 சதவீதம் பேர் வீடுகளை பெற்றும், குடியேறாமல் இருக்கின்றனர்.

    மாவட்டத்தில் நெருப்பெரிச்சல், வீரபாண்டி, அவிநாசி, திருமுருகன்பூண்டி உள்ளிட்ட இடங்களில் நகர்ப்புற வாழ்வாதார மேம்பாட்டு வாரியம் சார்பில் 3,744 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. அனைத்து வீடுகளும் பயனாளிகள் வசம் ஒப்படைக்கப் பட்டுவிட்டது.

    குடியிருப்போர் நலச்சங்கங்கள் அமைத்து குடியிருப்புகளை பராமரிக்கும் பொறுப்பை ஏற்க வேண்டும் என வாழ்விட மேம்பாட்டு வாரியம் வழிகாட்டியுள்ளது. அதன்படி ஒவ்வொரு இடங்களில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பிலும், பயனாளிகளை உறுப்பினர்களாக இணைத்து குடியிருப்பு நலச்சங்கங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

    குடியிருப்புகளின் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைப்பது, திடக்கழிவுகளை அகற்றுவது, குடிநீர் வினியோகம் செய்ய பணியாளர்களை நியமிப்பது, சுற்றுப்புறங்களில் தெருவிளக்கு பொருத்தி அதை பராமரிப்பது, குடியிருப்புகளை உரிய இடைவெளியில் புனரமைப்பது குடியிருப்பு வளாகத்தில் பூங்கா அமைத்து பராமரிப்பது பாதுகாப்புக்கென கண்காணிப்பு கேமரா பொருத்துவது போன்ற பல பணிகளை நலசங்கங்கள் ஏற்க வேண்டும்.

    இப்பணிகளை மேற்கொள்ளவும் அப்பணிக்கென நியமிக்கப்படும் பணியாளர்களுக்கு சம்பளம் உள்ளிட்ட செலவினங்களை ஈடு செய்ய ஒவ்வொரு குடியிருப்புகளில் இருந்தும் 250 ரூபாய் வரை மாத சந்தா வசூலிக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    ஆனால் குடியிருப்புகளை பெற்ற பயனாளிகள் பலர், வீடுகளை பூட்டி விட்டு குடியேறாமல் உள்ளனர். அந்த வகையில் 30 சதவீத வீடுகள் காலியாக உள்ளது என நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்கள் சந்தா தொகையையும் செலுத்துவதில்லை. இதனால் ஏற்படும் நிதி நெருக்கடியால், சங்கத்தை செயல்படுத்த முடியாமல் நலச்சங்க நிர்வாகிகள் திணறுகின்றனர். குடியிருப்பு மற்றும் சுற்றுப்புறங்களை சரிவர பராமரிக்க முடியாமல் திணறுகின்றனர்.

    இது குறித்து நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய உதவி பொறியாளர் சரவணபிரபு கூறியதாவது:- அடுக்குமாடி குடியிருப்புகளை பராமரிக்கும் பொறுப்பு, குடியிருப்போர் நலச்சங்கத்தினரிடம் வழங்கப்பட்டுள்ளது. குடியிருப்புவாசிகள் சங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். குடியிருப்புகளை பெற்ற நாளில் இருந்து அவர்கள் சந்தா தொகையை செலுத்த வேண்டும்.

    சிலர் போக்கியத்திற்கு இருக்கும் வீடுகளை உடனடியாக காலி செய்துவிட்டு வர முடியாது. பிள்ளைகளின் படிப்பு முடிந்தவுடன் அடுக்குமாடி குடியிருப்புக்கு வருகிறோம். பெற்றோருக்கு உடல்நிலை சரியில்லாததால் அங்கு வராமல் உள்ளோம் என பல காரணங்களை கூறி, இனியும் குடியேறாமல் உள்ளனர். விரைவில் வீடுகளில் குடியேறி விடுங்கள் எனஅறிவுறுத்தி வருகிறோம்.

    குடியிருப்போர் நலச்சங்கங்களின் செயல்பாடுகளுக்கு, குடியிருப்புவாசிகள் ஒத்துழைப்பு வழங்கினால் தான் குடியிருப்புகளின் பராமரிப்பு, குடிநீர், சுகாதாரம் உள்ளிட்டவற்றை சிரமமின்றி பெற முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×