search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சீர்காழி பகுதிகளில் பாதுகாப்பின்றி லாரிகளில் கொண்டு செல்லப்படும் சவுடுமண்
    X

    லாரிகளில் கொண்டு வரப்பட்ட சவுடுமண் பணிக்காக சாலையில் கொட்டப்பட்டது.

    சீர்காழி பகுதிகளில் பாதுகாப்பின்றி லாரிகளில் கொண்டு செல்லப்படும் சவுடுமண்

    • இந்த மண் மீது முறையான பாதுகாப்புடன் தடுப்புகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.
    • குறிப்பிட்ட அளவிற்கு மட்டுமே மண்ணை எடுத்து செல்லவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சீர்காழி:

    விழுப்புரம் முதல் நாகப்பட்டினம் வரை நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த கொள்ளிடம் முதல் தரங்கம்பாடி வரை நான்கு வழி சாலை விரிவாக்க பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    இப்பணிக்காக சீர்காழி சுற்றுவட்டார பகுதிகளில் தனியார் சவுடுமண் குவாரிகள் அமைக்கப்பட்டு நாள்தோறும் ஆயிரக்கணக்கான லாரிகள் சவுடுமண் கொண்டுவரப்பட்டு நான்கு வழிசாலையில் கொட்டப்படுகிறது. இரவு பகல் என 24 மணி நேரமும் சவுடுமண் ஏற்றிய லாரிகள் நகர் பகுதியை கடந்து புறவழிச் சாலைக்கு சென்று வருகிறது.

    இந்த லாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக எவ்வித பாதுகாப்பும் இன்றி சவுடு மண்ணை ஏற்றி செல்கின்றனர். இந்த மண் மீது முறையான பாதுகாப்புடன் தடுப்புகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என அரசு விதி இருந்தும், அதனை கண்டு கொள்ளாத லாரி ஓட்டுநர்கள் பெயரளவில் ஒரு சில லாரிகளில் மட்டுமே வலைகளை அமைத்துள்ளனர்.

    மாலை 6 மணிக்கு மேல் எந்த லாரிகளிலும் இதுபோன்ற தடுப்புகள் இல்லாமல் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாக மண்ணை ஏற்றி செல்கின்றனர். இதனால் வளைவுகள், வேகத்தடைகளில் இந்த லாரிகள் செல்லும் போது அதிகப்படியான மண் சரிந்து சாலை முழுவதும் சிதைந்து கிடக்கிறது. இதனை கண்டு கொள்ளாமல் லாரி ஓட்டுநர்கள் சென்று விடும் நிலையில் அப்பகுதி மக்களே மண்ணை அகற்றும் நிலையும் ஏற்படுகிறது.

    இதனால் நகர் பகுதி சாலைகள் முழுவதும் சவுடு மண் சிதைந்து கிடப்பதால் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் என அனைவரும் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே நான்கு வழிச்சாலைக்கு மண் ஏற்றி செல்லும் லாரிகளை போக்குவரத்து துறை அதிகாரிகள் உரிய ஆய்வு செய்து தகுந்த பாதுகாப்புடன் இயக்கவும், குறிப்பிட்ட அளவிற்கு மட்டுமே மண்ணை எடுத்துச் செல்லவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சாலையில் சிதறிய மண்ணை உடனடியாக அகற்ற வேண்டும் எனவும் சீர்காழி நகர மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×