களக்காடு அருகே கால்வாய் தூர்வாரப்படாததால் நிரம்பாத குளங்கள்-விவசாயிகள் கவலை

பச்சையாறு அணையில் இருந்து 2 குளங்களுக்கும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. பல இடங்களில் கால்வாய் ஆக்கிரமிப்பில் சிக்கி உள்ளதாக கூறப்படுகிறது.
கீழவடகரையில் நிரம்பாத குளத்தை படத்தில் காணலாம்.
கீழவடகரையில் நிரம்பாத குளத்தை படத்தில் காணலாம்.
Published on

களக்காடு:

களக்காடு அருகே உள்ள கீழவடகரையில் பூலாங்குளமும், மேலவடகரையில் பம்பன்குளமும் உள்ளன. இந்த குளங்களின் மூலம் அப்பகுதியில் உள்ள 200 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

இந்த குளங்களுக்கு மஞ்சுவிளை மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் இருந்து வரும் கால்வாய் மூலம் தண்ணீர் சென்றது. ஆனால் பச்சையாறு அணை கட்டப்பட்ட போது கால்வாய் அணைக்குள் சென்று விட்டது. அதன் பின்பு பச்சையாறு அணையில் இருந்து மடத்துக் கால்வாய் மூலம் 2 குளங்களுக்கும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் குளங்களுக்கு தண்ணீர் வரும் மடத்துக் கால்வாய் பல ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாமல் புதர் மண்டி கிடப்பதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர். மேலும் பல இடங்களில் கால்வாய் ஆக்கிரமிப்பில் சிக்கி உள்ளதாகவும் கூறுகின்றனர்.

இதையடுத்து 2 குளங்களுக்கும் தண்ணீர் செல்வதில் தடை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே சமீபத்தில் பெய்து வரும் கனமழையினால் இப்பகுதியில் உள்ள 100க்கும் மேற்பட்ட குளங்கள் நிரம்பியுள்ளன. ஆனால் பம்பன்குளமும், பூலாங்குளமும் இன்னும் நிரம்பவில்லை. பராமரிப்பு இல்லாததால், மடத்து கால்வாயில் வரும் தண்ணீர் தடைபட்டு குளங்களுக்கு வந்து சேரவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

குளங்கள் நிரம்பாததால் குளங்கள் மூலம் பாசனம் பெறும் விளைநிலங்களில் விவசாய பணிகளை தொடங்க முடியாமல் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். எனவே மடத்து கால்வாயை பராமரித்து, 2 குளங்களுக்கும் போதிய அளவு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com