

திருச்சி,
திருச்சி அரியமங்கலம்காந்தி தெரு பீடி காலனி 2வது தெருவை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வி (வயது 30). இவர் தன்னுடைய இருசக்கர வாகனத்தை வீட்டின் வாசலில் நிறுத்துவது வழக்கம். இந்த நிலையில் அவரது வாகனத்தில் இருந்து தொடர்ந்து பெட்ரோல் திருட்டு நடைபெற்று வந்துள்ளது.
கடந்த மூன்றாம் தேதி இரவு வீட்டின் முன்பாக நிறுத்தி இருந்த இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் திருடும் சத்தம் கேட்டு தமிழ்ச்செல்வி வெளியே வந்து பார்த்தார்.
அப்போது அரியமங்கலம் காமராஜ் நகர் பகுதியை சேர்ந்த தீபக் , திருவானைக்கோவில் நடு கொண்டையம்பேட்டை பகுதியை சேர்ந்த சம்பத் நாராயணன், பிரவீன் ராஜ் ஆகிய 3 பேரும் இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் திருடியது தெரிய வந்தது.
இதை தொடர்ந்து மறு நாள் தீபக்கிடம் தமிழ்ச்செல்வி பெட்ரோல் திருடியது தொடர்பாக கேட்டபோது தீபக் மற்றும் சம்பத் நாராயணன் இருவரும் தமிழ்ச்செல்வியை தாக்கியுள்ளனர்.
இதுகுறித்து தமிழ்ச்செல்வி அரியமங்கலம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீபக் மற்றும் சம்பத் நாராயணன் இருவரையும் கைது செய்தனர். மேலும் சம்பவம் குறித்து தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.