

திருச்சி:
திருச்சி மாநகராட்சியில் 52 வார்டுகளில் தி.மு.க.&அ.தி.மு.க. வேட்பாளர்கள் நேரடியாக மோதுகின்றனர். 13 வார்டுகளில் தி.மு.க. கூட்டணி கட்சிகளுடன் அ.தி.மு.க. மோதுகிறது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திருச்சி மாநகராட்சியில் உள்ள 65 வார்டுகளில் 718 பேர் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இதில் 15 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 114 வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுக்களை வாபஸ் பெற்றனர். இறுதியில் 65 வார்டுகளில் 589 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
இதில் 52 வார்டுகளில் தி.மு.க., அ.தி.மு.க. வேட்பாளர்கள் நேரடியாக மோதுகின்றன. தி.மு.க. வேட்பாளர்கள் 52 பேரில், 28-வது வார்டு மமக பைஸ்முகமது தி.மு.க.வின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார்.
மற்ற 13 வார்டுகளில், அ.தி.மு.க. வேட்பாளர்களை, 5 வார்டுகளில் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க. ஆகிய கட்சிகள் தலா 2 வார்டுகளிலும் எதிர்கொள்கின்றனர். அ.தி.மு.க. கூட்டணியில், 51-வது வார்டில் அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்தில் த.மா.கா. வேட்பாளர் செங்கனி போட்டியிடுகிறார்.