search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆடி மாத முதல் வெள்ளியை முன்னிட்டு அம்மன் கோவில்களில் குவிந்த பக்தர்கள்
    X

    ஆடி மாத முதல் வெள்ளியை முன்னிட்டு அம்மன் கோவில்களில் குவிந்த பக்தர்கள்

    • ஆடி வெள்ளிக்கிழமைகளில் அம்மனை வழிபட்டால் அம்மன் குளிர்ந்த மனதோடு பக்தர்கள் கேட்கும் வரங்களை கொடுப்பதோடு சிறந்த நற்பலன்கள் உண்டாகும் என்பதும் ஐதீகம்
    • ஆடி முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு அதிகாைல முதலே ஏராளமான பக்தர்கள் திருவானைக்காவல் கோவிலில் குவியத்தொடங்கினர்.

    திருச்சி :

    ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம் ஆகும். தெய்வீக மனம் கமழும் மாதமாக ஆடி திகழ்கிறது. இந்த மாதத்தை சக்தி மாதம் என்றும் ஆன்மீக பெரியோர்கள் கூறுகிறார்கள். ஆடி வெள்ளி, செவ்வாய், ஞாயிற்றுக்கிழமைகளில் அம்மன் கோவில்களில் அபிஷேக ஆராதனைகள், சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

    இதேபோல் வீடுகளிலும் பெண்கள் விரதம் இருந்து வேப்பிலை தோரணம் கட்டி அம்மனை வழிபட்டு நேர்த்திக்கடன் நிறைவேற்றி அக்கம்பக்கத்தினருக்கு கூழ் ஊற்றுவார்கள். இதன் மூலம் செல்வச்செழிப்பு, குழந்தை பேறு உள்ளிட்டவை கிடைக்கும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.

    ஆடி வெள்ளிக்கிழமைகளில் அம்மனை வழிபட்டால் அம்மன் குளிர்ந்த மனதோடு பக்தர்கள் கேட்கும் வரங்களை கொடுப்பதோடு சிறந்த நற்பலன்கள் உண்டாகும் என்பதும் ஐதீகம். இன்று ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமை என்பதால் திருவானைக்காவல் கோவிலில் அகிலாண்டேஸ்வரி அம்மன் தாழம்பூ பாவாடை அணிந்து மலர் கிரீடம் சூடி, காதுகளில் ஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்ரீசக்கரம் பொறிக்கப்பட்ட தாடகங்கள், கையில் தங்கக்கிளி மற்றும் திருஆபரணங்கள் அணிந்து சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    ஆடி முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு அதிகாைல முதலே ஏராளமான பக்தர்கள் திருவானைக்காவல் கோவிலில் குவியத்தொடங்கினர். பக்தர்கள் சிரமமின்றி வரிசையாக சென்று தரிசனம் செய்யும் வகையில் தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டு இருந்தன.

    ஆடிவெள்ளியையொட்டி திருவானைக்காவல் கோவிலில் அதிகாலை 3 மணியளவிலேயே நடை திறக்கப்பட்டு அதன் பின்னர் சிறு, சிறு பூஜைகால இடைவெளிக்கு பின்னர் தொடர்ந்து நள்ளிரவு வரை சிறப்பு பூஜைகளும், வழிபாடுகளும் நடைபெறுகிறது. அம்பாள் காலையில் லெட்சுமியாகவும், உச்சிக்காலத்தில் பார்வதியாகவும், மாலையில் சரஸ்வதி யாகவும் காட்சி தந்தார்.

    ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு திருவானைக்காவல் டிரங்க் ரோடு, சன்னதிதெரு ஆகிய பகுதிகளில் போக்குவரத்து போலீசார் தடுப்புகள் அமைத்து பக்தர்கள் சிரமமின்றி கோவிலுக்கு வந்து தரிசனம் செய்து செல்ல ஏற்பாடுகள் செய்திருந்தனர்.

    இேதபோல் உறையூர் வெக்காளியம்மன் கோவிலிலும் இன்று ஆடி வெள்ளியையொட்டி ஏராளமான பக்தர்கள் விளக்கேற்றியும், மாலைகள் சாற்றியும் வழிபட்டனர். மேலும் சமயபுரம் ஆதி மாரியம்மன் கோவில், தென்னூர் உக்கிரமாகாளியம்மன் உள்ளிட்ட அனைத்து அம்மன் கோவில்களிலும் பக்தர்கள் திரண்டனர்.

    Next Story
    ×