திம்பம் மலைப்பாதையில் தொடரும் போக்குவரத்து நெரிசல்- வாகன ஓட்டிகள் கடும் அவதி

புளிஞ்சூர் சோதணை சாவடியில் இருந்து பண்ணாரி வரை 40 நிமிடத்தில் கடக்க வேண்டிய தொலைவை தற்போது 3 மணி நேரம் முதல் 4 மணி நேரம் வரை இந்த பாதையை கடக்க முடிகிறது.தினம் தினம் போக்குவரத்து நெரிசலில் சிக்கி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் தவித்து வருகின்றனர்.
திம்பம் மலைப்பாதையில் தொடரும் போக்குவரத்து நெரிசல்- வாகன ஓட்டிகள் கடும் அவதி
Published on

தாளவாடி:

ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த திம்பம் மலைப்பாதை 27 அபாயகரமான கொண்டை ஊசி வளைவுகளை கொண்டதாகும். இந்த மலைப்பாதை தமிழக, கர்நாடகத்தை இணைக்கும் முக்கிய போக்குவரத்து பகுதியாகும். இந்த வழித்தடத்தில் வனவிலங்குகள் வாகனத்தில் மோதி உயிரிழப்பதாக கூறி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அதைத்தொடர்ந்து 2022 ஆண்டு பிப்ரவரி 10-ம் தேதி முதல் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்க வேண்டும் என உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். அதைத்தொடர்ந்து இந்த தடை அமல்படுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து மாலை 6 மணி முதல் காலை வரை பண்ணாரி சோதனை சாவடியில் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டது.

காலை 6 மணிக்கு வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வாகனங்கள் அனைத்தும் ஒரே நேரத்தில் திம்பம் மலைப்பாதையில் அணிவகுத்து செல்வதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. பண்ணாரி சோதனை சாவடி வரை வாகனங்கள் அணிவகுத்து நின்று ஊர்ந்து செல்கின்றது. புளிஞ்சூர் சோதணை சாவடியில் இருந்து பண்ணாரி வரை 40 நிமிடத்தில் கடக்க வேண்டிய தொலைவை தற்போது 3 மணி நேரம் முதல் 4 மணி நேரம் வரை இந்த பாதையை கடக்க முடிகிறது.

இதனால் தினம் தினம் போக்குவரத்து நெரிசலில் சிக்கி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் தவித்து வருகின்றனர். இதனால் துக்க நிகழ்ச்சி, அவசர தேவை, மருத்துவம், கல்லூரி, அரசு உழியர்கள், பணிகளுக்கு செல்ல முடியாமல் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். எரிபொருள் தேவையும் அதிக அளவில் தேவைப்படுகிறது. அதேபோல் திம்பம் மலைப்பாதை என்பது குறைந்த அளவே எடையை தாங்க கூடிய நிலையில் கடந்த காலத்தில் சாலை அமைக்கப்பட்டுள்ளது.

தற்போது வாகனங்கள் இடைவிடாமல் மலைப்பாதையில் நிற்பதால் அதிக பாரம் தாங்காமல் மலைப்பாதையில் விரைவில் மண்சரிவு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு மண்சரிவு ஏற்பட்டால் திம்பம் மலைப் பாதையில் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்படும் நிலை ஏற்படும். எனவே இதற்கு நிரந்தர தீர்வை தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com