search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொடைக்கானலில் கோடை சீசன் முடிந்தும் பூங்காவில் பூத்துகுலுங்கும் வண்ணமலர்கள் சுற்றுலா பயணிகள் உற்சாகம்
    X

    பிரையண்ட் பூங்காவில் சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசிக்கும் காட்சி.

    கொடைக்கானலில் கோடை சீசன் முடிந்தும் பூங்காவில் பூத்துகுலுங்கும் வண்ணமலர்கள் சுற்றுலா பயணிகள் உற்சாகம்

    • சாதாரண நாட்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
    • சீசன் முடிந்தும் பிரையண்ட் பூங்காவில் பல்வேறு வகையான மலர்கள் தொடர்ந்து பூத்துக் குலுங்குவது சுற்றுலா பயணிகளை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தி உள்ளது.

    கொடைக்கானல்:

    கொடைக்கானலில் வருடந்தோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடைவிழா நடத்தப்பட்டு மலர் கண்காட்சி மற்றும் விளையாட்டு போட்டிகள் நடைபெறும். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கால் கோடைவிழா நடத்தப்படாத நிலையில் இந்த வருடம் நடைபெற்றது.

    இதில் ஏராளமான சுற்றுலா பயணிகள் பங்கேற்று பூத்து குலுங்கிய வண்ணமலர்களை கண்டுரசித்தும், விளையாட்டுபோட்டிகளில் பங்கேற்று பரிசுகளையும் பெற்றுச்சென்றனர். கோடைவிழா நிறைவடைந்து 2 மாதங்கள் கடந்தும் பிரையண்ட் பூங்காவில் பல்வேறு வகையான மலர்கள் தொடர்ந்து பூத்துக் குலுங்குவது சுற்றுலா பயணிகளை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தி உள்ளது.

    டெல்பினிம், சால்வியா, டேலியா, சிங்க முகப்பூக்கள் உள்ளிட்ட பல ஆயிரக்கணக்கான மலர் வகைகள் பூத்துக் குலுங்குகின்றன.கோடைகால விடுமுறை சீசன் முடிந்தும் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்ததாக இல்லை. சாதாரண நாட்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

    கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக சாரல்மழையும் விட்டுவிட்டு கனமழையும் பெய்து வருகிறது. இதனால் வெப்பத்தின் தாக்கம் அடியோடு குறைந்து குளிர்ச்சியான சீதோஷ்ணம் நிலவி வருகிறது. இது சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.

    அவர்கள் பிரையண்ட் பூங்கா மட்டுமின்றி, ஏரியில் படகுசவாரி செய்தும், பல்வேறு சுற்றுலா இடங்களுக்கு சென்றும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்து வருகின்றனர்.

    இதனால் உள்ளூர் சிறு குறு வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கொரோனா காலங்களில் வியாபாரத்தில் மிகவும் நஷ்டம் அடைந்திருந்த வியாபாரிகள் தற்போது அந்த நிலையில் இருந்து சற்று விடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். பிரையண்ட் பூங்காவில் தொடர்ந்து அவ்வப்போது மலர்களை கவாத்து செய்யும் பணியும் நடைபெற்று வருகிறது. இதனால் இடைக்கால சீசனிலும் இன்னும் பல வகையான மலர்கள் சுற்றுலாப் பயணிகளை உற்சாகப்படுத்தும் வகையில் பூத்துக் குலுங்கும் என பூங்கா அலுவலர் சிவபாலன் தெரிவித்தார்.

    Next Story
    ×