

கொடைக்கானல்:
தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் வெயிலை சமாளிக்க மலைதலங்களுக்கு பொதுமக்கள் படையெடுக்க தொடங்கி உள்ளனர். இன்று கொடைக்கானலில் உள்ள மோயர் சதுக்கம், பைன் மரச்சோலை, தூண் பாறை, பசுமைப் பள்ளத்தாக்கு, பிரையண்ட் பூங்கா போன்ற பகுதிகளில் சுற்றுலாப்பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
சுற்றுலாப்பயணிகள் ஏரிச்சாலைப் பகுதியில் சைக்கிள் சவாரி, குதிரைச்சவாரி செய்து மகிழ்ந்தனர். படகுக்குழாம் பகுதியில் படகு சவாரி செய்ய நீண்ட வரிசையில் காத்திருந்தனர். சுற்றுலா பயணிகள் வருகையால் சிறு குறு வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
மேலும் ஏரிச்சாலை யைச்சுற்றி தள்ளுவண்டிக் கடைகள் ஆக்கிரமிப்பால் சைக்கிள் சவாரி, குதிரை சவாரி செய்பவர்கள், ஏரிச்சாலை நடைமேடைப்பகுதியில் நின்று ஏரியை ரசிக்கும் சுற்றுலாப்பயணிகள் என அனைவரும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இது அன்றாட நிகழ்வாக உள்ளது. இதேபோல் வெள்ளி நீர்வீழ்ச்சி முதல் ஏரிச்சாலை வரை விரிவுபடுத்தப்பட்ட நெடுஞ்சாலையின் இருபுறங்களிலும் கடைகள் அமைத்தும், கனரக வாகனங்களை நிறுத்தியும், மணல் ஜல்லி கொட்டி சாலையின் ஓரத்திலேயே வியாபாரம் செய்பவர்களாலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
நெடுஞ்சாலையில் கடை அமைத்து வியாபாரம் செய்பவர்களின் கடைகளில் பொருட்களை வாங்குபவர்கள் தங்கள் வாகனங்களை சாலைகளில் நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, சாலைவிபத்து ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.