search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு- போக்குவரத்து நெரிசல்

    • கொடைக்கானல் நகருக்குள் நுழைவு பகுதியான வெள்ளிநீர்வீழ்ச்சி சுங்கச்சாவடியில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
    • மலர் கண்காட்சி கோடை விழாவிற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் தொடங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்தது. இந்தநிலையில் நேற்று பகல் பொழுதில் இதமான சீதோஷ்ணமும், மாலையில் தொடங்கிய மழை இரவு வரை நீடித்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டது.

    தொடர் விடுமுறையால் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். கொடைக்கானல் நகருக்குள் நுழைவு பகுதியான வெள்ளிநீர்வீழ்ச்சி சுங்கச்சாவடியில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். கோடை சீசன் தொடங்கிய நிலையில் சுற்றுலா பயணிகள் வாகனங்கள் அதிகரித்து வருகின்றன.

    எனவே போதிய அளவு போலீசார் பணியமர்த்தி போக்குவரத்து சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நகரின் முக்கிய சுற்றுலா தலங்களான வெள்ளிநீர்வீழ்ச்சி, பியர்சோழா அருவி, பாம்பார் அருவி, நட்சத்திர ஏரி, பிரையண்ட்பூங்கா, மோயர்பாயிண்ட், பைன்பாரஸ்ட் உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதி வருகிறது.

    பிரையண்ட் பூங்காவில் சுற்றுலா பயணிகளை கவர பல வண்ண மலர்கள் பூத்து குலுங்குகின்றன. மேலும் நட்சத்திர ஏரியில் அமைக்கப்பட்டுள்ள செயற்கை நீருற்றும் அனைவரையும் கவர்ந்தது. நேற்று சாரல் மழையில் நனைந்தபடியே ஏரியில் படகு சவாரி மற்றும் ஏரிச்சாலையில் சைக்கிள், குதிரை சவாரி செய்து மகிழ்ந்தனர். சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளதால் வியாபாரிகள், கைடுகள் மற்றும் ஓட்டல் உரிமையாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    அடுத்த வாரம் அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை தொடங்கும் என்பதால் சுற்றுலா பயணிகள் வருகை மேலும் அதிகரிக்கக்கூடும். எனவே மலர்கண்காட்சி கோடைவிழாவிற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் தொடங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

    Next Story
    ×