search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சென்னைக்கு அதிக அளவில் விற்பனைக்கு வரும் திருத்தணி பனை ஓலை விசிறிகள்- ஒன்று ரூ.15 முதல் 30 வரை விற்கப்படுகிறது
    X

    சென்னைக்கு அதிக அளவில் விற்பனைக்கு வரும் திருத்தணி பனை ஓலை விசிறிகள்- ஒன்று ரூ.15 முதல் 30 வரை விற்கப்படுகிறது

    • நாங்கள் பரம்பரை பரம்பரையாக பனை ஓலை விசிறி தயாரித்து வருகிறோம்.
    • கோடைக் காலம் ஆரம்பம் என்பதால் பனை ஓலை விசிறி தயாரிக்கும் பணியில் குடும்பத்தோடு ஈடுபட்டுள்ளோம்.

    சென்னை:

    வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் வீட்டில் ஏர்கூலர், ஏ.சி. என எந்திரங்கள் வந்தாலும் இன்னும் பனை ஓலை விசிறியை மக்கள் மறக்காமல் உள்ளனர். பனை ஓலை விசிறியை வீசும்போது அதில் இருந்து ஜில்லென்று வரும் காற்று உடல் நலத்துக்கு ஏற்றது. பல இடங்களில் பனை ஓலை விசிறிகள் தயாரிக்கப்பட்டாலும் திருத்தணி பகுதியில் தயாராகும் பனை ஓலை விசிறிக்கு மவுசு அதிகம் தான். மிகவும் நேர்த்தியாக வண்ண, வண்ண கலரில் தயாரிக்கப்படும் திருத்தணி பனை ஓலை விசிறியை ஏராளமானோர் கேட்டு வாங்கி செல்கிறார்கள்.

    திருத்தணியை அடுத்த கே.ஜி. கண்டிகை அருகே உள்ள சிறுகுமி கிராமத்தில் உள்ள குடும்பத்தினர் அனைவரும் பனை ஓலை விசிறி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் தயாரிக்கும் பனை ஓலை விசிறிகள் அதிக அளவில் சென்னைக்கு விற்பனைக்கு வருகிறது. இதேபோல் திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் விற்பனை செய்ய மொத்த வியாபாரிகள் போட்டி போட்டு வாங்கி செல்கிறார்கள்.

    சிறுகுமி கிராமத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை குடும்பம், குடும்பமாக பனை ஓலை விசிறி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் பனை ஓலை தயாரிப்பு மும்முரமாக நடந்து வருகிறது. ஒரு விசிறி ரூ.15 முதல் ரூ.30 வரை விற்பனை செய்கின்றனர்.

    இது குறித்து விசிறி தயாரிக்கும் 70 வயதான ருக்குமானந்தன் கூறியதாவது:

    நாங்கள் பரம்பரை பரம்பரையாக பனை ஓலை விசிறி தயாரித்து வருகிறோம். தற்போது இளைய தலைமுறைகள் படித்து பட்டம் பெற்று வேலைக்கு சென்று விட்டனர். இதனால் இந்த தொழிலில் குறைவானவர்களே இன்னும் ஈடுபட்டு வருகிறார்கள்.

    வசந்தி :

    எங்களுக்கு இந்த தொழிலைவிட்டால் வேறு எதுவும் தெரியாது. ஒரு நாளைக்கு 40 முதல் 50 விசிறிகள் வரை செய்கின்றோம். குறைந்த வருமானம் தான் கிடைக்கிறது. எனினும் நாங்கள் தொடர்ந்து செய்து வந்த தொழிலை விட மனது வரவில்லை.

    சோமநாதன்:

    தற்போது கோடைக் காலம் ஆரம்பம் என்பதால் பனை ஓலை விசிறி தயாரிக்கும் பணியில் குடும்பத்தோடு ஈடுபட்டுள்ளோம். வெயிலின் தாக்கம் அதிகரித்தால் பனை ஓலை விசிறி வியாபாரம் சூடுபிடிக்கும்.தற்போது அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் பொதுமக்களும் பனை ஓலை விசிறிகளை அதிக அளவில் வாங்கி உபயோகிக்கின்றனர்.கோடை காலம் தொடங்க உள்ளதால் பனை ஓலை அதிக அளவில் விற்பனையாகும் என்று எதிர்பார்க்கிறோம். குடும்பத்தில் உள்ள சிறுவர்களும் இதற்கு உதவி செய்து பனை ஓலை விசிறி தயாரிப்பார்கள்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×