ஆனைமலை புலிகள் காப்பகத்தில் 'சூழல் சுற்றுலா' திட்டம் செயல்பாட்டுக்கு வருமா? சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்பு

மேற்கு தொடர்ச்சி மலையில் 1.14 லட்சம் ஏக்கரில் அமைந்துள்ளது.50 வயது வரையிலான 88 முதலைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது.
கோப்புபடம்.
கோப்புபடம்.
Published on

உடுமலை :

ஆனைமலை புலிகள் காப்பகம், உடுமலை, அமராவதி வனச்சரகங்கள், மேற்கு தொடர்ச்சி மலையில் 1.14 லட்சம் ஏக்கரில் அமைந்துள்ளது.அற்புதமான சூழல் மண்டலமாக உள்ள இந்த வனப்பகுதி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், பழங்குடியின மக்களுக்கு வருவாய் கிடைக்கவும், சூழல் சுற்றுலா திட்டம் 2019ல் அறிமுகம் செய்யப்பட்டது.சின்னாறு பகுதியில் டிரக்கிங் எனும் மலையேற்றம், கூட்டாற்றில் பரிசல் பயணம், பாரம்பரிய குடிசையில் தங்குதல் என நாள் முழுதும் இயற்கையுடன் பொழுதுபோக்கும் வகையில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டது.இதற்கான கட்டமைப்பு வசதிகளும் ஏற்படுத்தப்பட்டது. ஆனால் திட்டம் செயல்பாட்டுக்கு வரவில்லை. மேலும் 10 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான செலவில் அமைக்கப்பட்ட குடில்கள், பரிசல் உள்ளிட்ட கட்டமைப்புகள் அனைத்தும் காட்சிப்பொருளாக வீணாகி வருகின்றன. முன்பதிவுக்காக வனத்துறை அறிவித்த www.chinnarnaturetrail.com என்ற இணையதளமும் பயன்பாட்டில் இல்லை. இதனால் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்.

வரும் கோடை சீசனிலாவது சூழல் சுற்றுலா திட்டத்தை செயல்படுத்த வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் சுற்றுலா பயணிகள் பயன்பெறுவதுடன் பழங்குடியினருக்கும் நிரந்தர வருவாய் கிடைக்கும்.மேலும் இக்கோரிக்கையை வலியுறுத்தி தமிழக அரசுக்கு பழங்குடியினர் மனு அனுப்பி உள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி ஆனைமலை புலிகள் காப்பகம், அமராவதி அணை, பெரிய அளவிலான பூங்கா, படகு சவாரி என சுற்றுலா மையமாக உள்ளது.அதே போல் அமராவதி அணை அருகே வனத்துறை சார்பில் 1976ல் தொடங்கப்பட்ட ஆசியாவிலேயே சிறப்பு வாய்ந்த சதுப்பு நில முதலைகள் பராமரிக்கப்படும் முதலை பண்ணை உள்ளது.12 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள முதலை பண்ணையில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல்வேறு மேம்பாட்டுப்பணிகள் செய்யப்பட்டுள்ளது.

பண்ணையில் புல் தரை நடைபாதை, வனம், வன விலங்குகள், அவற்றை காப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இருவாச்சி பறவை, புலி, சிறுத்தை, யானை உள்ளிட்ட உருவங்கள் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.மேலும் பண்ணையை சுற்றிலும் முதலைகளின் வகைகள், சதுப்பு நில முதலைகள் முட்டையிடுவது முதல் பெரியதாவது வரையிலான அவற்றின் வாழ்வியல் முறைகள் குறித்த சிற்பங்களும் இடம் பெற்றுள்ளன.குழந்தைகளை கவரும் வகையில் முயல், கொக்கு, மயில் என வன விலங்குகள், பறவைகளின் உருவங்களுடன் கூடிய சீசா, பெஞ்ச், ஊஞ்சல் என பல்வேறு விளையாட்டு உபகரணங்கள் அமைக்கப்பட்டு ள்ளன.கழிப்பறை, அமருவதற்கான இயற்கையான இருக்கைகள், நடை பாலம் என பல்வேறு மேம்பாட்டு பணிகள் செய்யப்பட்டுள்ளது. இங்கு பெரிய அளவிலான திறந்த வெளி அரங்கு மற்றும் தொட்டிகளில் சிறிய குட்டிகள் முதல் 50 வயது வரையிலான 88 முதலைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது.

இங்கு வசிக்கும் முதலைகளுக்கு வனத்துறை சார்பில் 35 கிலோ மாட்டிறைச்சி, 9 கிலோ மாட்டு எலும்புகள் மற்றும் 44 கிலோ மீன் துண்டுகளாக்கி உணவாக வழங்கப்படுகிறது.தினமும் மதியம் 2 மணிக்கு அலுமினிய பக்கெட்டில் உணவு எடுத்துச்சென்று தட்டி ஒலி எழுப்பினால் தண்ணீர் தொட்டி, மணலில் அமைதியாக காணப்படும் அவை வேகமாக எழுந்து வந்து பராமரிப்பாளரால் வீசப்படும் இறைச்சி துண்டுகளை, வாயில் கவ்வி அப்படியே விழுங்குகின்றன.முதலைகள் தேவைக்கு அதிகமாக உணவு எடுப்பதில்லை. பெரிய முதலைகளுக்கே தினமும் அரை கிலோ உணவு இருந்தால் போதும். பண்ணையில் வாரத்தில் 6 நாட்கள் மட்டுமே உணவு வழங்கப்படுகிறது.ஞாயிற்றுக்கிழமை விடுமுறை யாகும். அன்று முதலைகளுக்கு உணவு வழங்க ப்படுவதில்லை.முதலைகளுக்கு நாக்கு, தாடையுடன் ஒட்டியுள்ளதால், மென்று தின்ன முடியாது. அப்படியே முழுங்கி விடுகின்றன. இது குறித்து வனத்துறையினர் கூறியதாவது:-

சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் முதலை பண்ணை மேம்படுத்தப்பட்டுள்ளது. இங்கு சிறியது முதல் பெரியது வரையிலான 88 முதலைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. முதலைகளுக்கு மாட்டிறைச்சி, மீன் உணவாக வழங்கப்படுகிறது தேவைக்கு மட்டும் குறைந்தளவு உணவு மட்டுமே எடுத்துக்கொள்கின்றன.முதலைகள் பெரிய அளவில் இருந்தாலும் அவற்றின் உணவின் அளவு மிகவும் குறைவாகும். தினமும் 44 கிலோ மாட்டிறைச்சி 44 கிலோ மீன் என வனத்துறையிலுள்ள கால்நடை டாக்டர் பரிந்துரை அடிப்படையில் உணவு வழங்கப்படுகிறது.முதலைகள் அவற்றின் தேவைக்கு மட்டுமே எடுத்துக்கொள்ளும். தேவைக்கு அதிகமான இறைச்சியை எடுத்துக்கொள்ளாது.கோடை விடுமுறை தொடங்கினால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கும் என்பதால் பல்வேறு மேம்பாட்டு பணிகள் செய்யப்பட்டு புதுப்பொலிவு படுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com