search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உடுமலை அமராவதி அணையில் இருந்து இன்று முதல் தண்ணீர் திறப்பு - 7,520 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்
    X

    கோப்புபடம்.

    உடுமலை அமராவதி அணையில் இருந்து இன்று முதல் தண்ணீர் திறப்பு - 7,520 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்

    • அலங்கியம் முதல் கரூர் வரை 21,867 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
    • அக்டேபர் 13-ந் தேதி வரை 2 ஆயிரத்து 74 மில்லியன் கனஅடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது.

    உடுமலை :

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகேயுள்ள அமராவதி அணையில் இருந்து திருப்பூர், கரூர் மாவட்டத்தில் உள்ள 54,637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.அமராவதி பழைய ஆயக்கட்டு பாசனத்தின் கீழ் உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவில் கல்லாபுரம், ராகுளம், கொமரலிங்கம், கண்ணாடிபுத்தூர், சோழமாதேவி, கணியூர், கடத்தூர், காரத்தொழுவு ஆகிய 8 ராஜவாய்க்கால்களுக்கு உட்பட்ட 7,520 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

    நடப்பு நீர்ப்பாசன ஆண்டில் பழைய ஆயக்கட்டு ராஜவாய்க்கால் பாசன நிலங்களுக்கு வரும் ஜூன் 1 முதல் குறுவை நெல் சாகுபடிக்கு நீர் திறக்க விவசாயிகள் கோரிக்கையின் அடிப்படையில் நீர்வளத்துறை அதிகாரிகள் அரசுக்கு கருத்துரு அனுப்பினர். அதிகாரிகள் கூறுகையில், அமராவதி பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு ஜூன் 1 முதல் 135 நாட்களில் உரிய இடைவெளி விட்டு நீர் திறக்க அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. அரசாணை வெளியிட்டதும் நீர் திறக்கப்படும் என்றனர்.

    மேலும் அமராவதி பழைய ஆயக்கட்டு பாசனத்தில் திருப்பூர், கரூர் மாவட்டங்களில் தாராபுரம், கரூர், அரவக்குறிச்சி தாலுகாவில் அலங்கியம் முதல் கரூர் வரை 10 பழைய வாய்க்கால் பாசனத்துக்கு உட்பட்ட 21,867 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.அதேபோல் புதிய ஆயக்கட்டு பாசனத்தில் உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம் தாலுகாவிலுள்ள 25,250 ஏக்கர் நிலங்கள் பயன்பெறுகின்றன.

    பாசன பகுதிகளிலுள்ள நிலைப்பயிர்கள் மற்றும் கரும்பு அறுவடை முடிந்ததும் கட்டை கரும்பு மற்றும் நடவு மேற்கொள்ள அமராவதி அணையில் இருந்து உயிர்த்தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.ஜூனில் தென்மேற்கு பருவ மழை துவக்கியதும் அணை நீர் இருப்பை பொருத்து நீர் திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்தநிலையில் இன்று முதல் உடுமலை அமராவதி அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படுகிறது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், திருப்பூர் மாவட்டம் அமராவதி அணை பழைய பாசனத்திற்கு உட்பட்ட முதல் 8 பழைய ராஜ வாய்க்கால்களின் (ராமகுளம், கல்லாபுரம், குமரலிங்கம், சர்க்கார் கண்ணாடிபுத்தூர், சோழமாதேவி, கணியூர், கடத்தூர் மற்றும் காரத்தொழுவு) பாசனப்பகுதிகளுக்கு ஜூன் 1-ந் தேதி (இன்று) முதல் அக்டேபர் 13-ந் தேதி வரை 2 ஆயிரத்து 74 மில்லியன் கனஅடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது. இதன் மூலம் திருப்பூர் மாவட்டத்தில் 7,520 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×