வேளாண் இடுபொருட்களுக்கு மானியம் - விவசாயிகளுக்கு வேளாண்மை துறையினர் அழைப்பு

உரங்கள் மானிய விலையில் வேளாண்மை துறை சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.உயிர் பூச்சிக்கொல்லிகள் மெட்டா ரைசியம் சூடோமோனஸ், டிவிரிடி ஆகியவை 50 சதவீத மானியத்தில் உள்ளது.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

உடுமலை:

உடுமலை சுற்றுப்புற பகுதியில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. நீர் இருப்பு மற்றும் நீர்வரத்துக்கு ஏற்றவாறு விவசாயிகள் காய்கறிகள், பழங்கள், கீரைகளை சாகுபடி செய்து வருகின்றனர். இவர்களுக்கு தேவையான இடுபொருட்கள் உரங்கள் மானிய விலையில் வேளாண்மை துறை சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் பயிர் சாகுபடிக்கு தேவையான இடுபொருட்களுக்கு மானியம் வந்துள்ளதாகவும், இடுபொருட்களும் கையிருப்பில் உள்ளதாகவும் வேளாண் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து வேளாண்மை உதவி இயக்குனர் தேவி கூறியதாவது:-

தேசிய உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்டத்தின் கீழ் சான்று பெற்ற உளுந்து, சோளம், நிலக்கடலை விதைகளும், விதை கிராமத் திட்டத்தின் கீழ் நெல் விதை 50 சதவீத மானியத்தில் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. 25 சதவீத உரச் செலவை குறைக்கக்கூடிய ரைசோபியம், அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா, பொட்டாஷ் பாக்டீரியா, துத்தநாக சத்தை கரைத்துக் கொடுக்கும் உயிர் உரங்கள் 50 சதவீத மானியம் போக ரூ. 225-ல் பெற்றுக் கொள்ளலாம். உயிர் பூச்சிக்கொல்லிகள் மெட்டா ரைசியம் சூடோமோனஸ், டிவிரிடி ஆகியவை 50 சதவீத மானியத்தில் உள்ளது.

எனவே மானிய விலையில் உள்ள நுண்ணூட்டக் கலவைகள் ஒரு கிலோ வீதம் நெல் நுண்ணூட்டம் ரூ. 57.04, கரும்பு நுண்ணூட்டம் ரூ. 64.94, தென்னை நுண்ணூட்டம் ரூ102.54, பயறு நுண்ணூட்டம் ரூ.132.80, சிறுதானிய நுண்ணூட்டம் ரூ.101.29-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் தேக்கு, மகாகனி, சவுக்கு, மலைவேம்பு போன்ற மரக்கன்றுகள் வேளாண் காடுகள் திட்டத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. ஒரு எக்டேர் பரப்பளவில் வேம்பு சாகுபடி செய்ய மானியம் ரூ. 21 ஆயிரம் வழங்கப்பட உள்ளது.மேலும் தென்னங்கன்றுகள் நெட்டை குட்டை ரகம் ரூ.125 க்கு விற்பனைக்கு உள்ளது. பேட்டரி தெளிப்பான் மானிய விலையில் வழங்கப்பட உள்ளது.

விவசாயிகள் தங்கள் கைப்பேசியில் உழவன் செயலி மூலம் பதிவு செய்தும் சம்பந்தப்பட்ட பகுதி வேளாண்மை அலுவலரை 9344737991 என்ற எண்ணிலும், துணை வேளாண்மை அலுவலரை 7904087328 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு பயன் அடையலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com