search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தென்னை நார் தொழிற்சாலைகளை வெள்ளை நிற பிரிவில் தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும்
    X

    கோப்பு படம்.

    தென்னை நார் தொழிற்சாலைகளை வெள்ளை நிற பிரிவில் தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும்

    • தென்னை நார், கோகோ பித் உள்ளிட்டவை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
    • 95 சதவீதம் இயற்கை மற்றும் பாரம்பரிய முறையில் தான் இயங்குகின்றது.

    உடுமலை:

    தென்னை நார் தொழிற்சாலைகளை, வெள்ளை நிற பிரிவில் தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளோம். இதற்குரிய தீர்வை எதிர்பார்க்கிறோம் என கோவை மாவட்ட தென்னை நார் மற்றும் சார்பு பொருட்கள் உற்பத்தியாளர் சங்க தலைவர் தெரிவித்தார்.

    கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தென்னை நார் தொழிற்சாலைகளில் தென்னை நார், கோகோ பித் உள்ளிட்டவை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இத்தொழில் வெள்ளை நிற பிரிவில் இருந்து ஆரஞ்ச் பிரிவுக்கு மாற்றப்பட்டதால் கடுமையாக பாதிக்கப்பட்டதாக உற்பத்தியாளர்கள் வேதனை தெரிவித்தனர்.

    இந்நிலையில் சென்னையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் வெள்ளை நிற பிரிவிலேயே தொடர வேண்டும் என அமைச்சரிடம் வலியுறுத்தியதாக தென்னை நார் உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.

    இது குறித்து கோவை மாவட்ட தென்னை நார் மற்றும் சார்பு பொருட்கள் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் சுதாகர் கூறியதாவது:-

    தேசிய பசுமை தீர்ப்பாயம், மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு தென்னை நார் தொழிலால் மாசு ஏற்படுவதாக தொடர்ந்து புகார்கள் சென்றன. இந்நிலையில் கடந்த 2021ம் ஆண்டு தமிழக அரசு வெள்ளை நிற பிரிவில் இருந்து ஆரஞ்ச் பிரிவுக்கு இத்தொழிலை மாற்றியது.

    சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசின் முடிவுக்கு தடை விதித்து உத்தரவிட்டதால் வெள்ளை நிற பிரிவில் தொடர்கிறது. கடந்த 6 மாதத்துக்கு முன் மத்திய அரசின் மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் தொழிலில் உள்ள பிரச்சினைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    அதன்படி வெள்ளை, பச்சை, ஆரஞ்சு என 3 வகைகளாக பிரிக்கலாம் என கருத்து கேட்டு தெரிவிக்க தமிழக அரசுக்கு தெரிவிக்கப்பட்டது. இதற்கான ஆலோசனை கூட்டம் 2 நாட்களுக்கு முன் சென்னையில் அமைச்சர் மெய்யநாதன் தலைமையில் நடந்தது.

    அதில் தென்னை நார் தொழில்கள் 95 சதவீதம் இயற்கை மற்றும் பாரம்பரிய முறையில் தான் இயங்குகின்றன. எனவே தொழில் வெள்ளை நிற பிரிவுக்கு மாற்ற வேண்டும்.5 சதவீதம் மட்டும் ரசாயனம் பயன்படுத்தும் தொழிற்சாலைகள் ஆரஞ்ச் நிறத்துக்கு மாற்றலாம். இது குறித்து அமைச்சரிடம் வலியுறுத்தப்பட்டது.

    இதற்கு அமைச்சர் பரிசீலனை செய்து முதல்வர் உரிய நடவடிக்கை எடுப்பார் என தெரிவித்தார்.

    நல்ல முடிவு கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×