

திருப்பூர் :
உலக மகளிர் தினத்தையொட்டி திருப்பூர் ஒன்றியம் வள்ளிபுரம் ஊராட்சியில் உள்ள மகளிர் சுய உதவி குழு மகளிர்களுக்கிடையே விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு திருப்பூர் வடக்கு தொகுதி கே.என்.விஜயகுமார் எம்.எல்.ஏ.பரிசுகள் வழங்கினார். இதில் அனைத்து மகளிர் சுய உதவி குழுக்களுக்கும் ரூ.6 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பிலான கடனுதவி வழங்கப்பட்டது. மேலும் தோட்டக்கலை துறையின் மூலம் அனைவருக்கும் மா, நெல்லி, எலுமிச்சை, கொய்யா உள்ளிட்ட மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
முன்னதாக பசுமை நகரில் உள்ள வீதிகளுக்கு ரூ.25 லட்சத்தில் கான்கிரீட் சாலைகள் அமைக்கும் பணிகளுக்கு பூமிபூஜை நடந்தது. இதில் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர்கள் கண்ணம்மாள் ராமசாமி, சாமிநாதன், பேரவை ஒன்றிய செயலாளர் எஸ்.எம்.பழனிசாமி, ஊராட்சி மன்ற தலைவர் முருகேசன், ஒன்றிய கவுன்சிலர் ஐஸ்வர்ய மஹராஜ் உள்ளிட்ட நிர்வாகிகளும், பொதுமக்களும் கலந்துகொண்டனர்.