உரிமையாளருக்கு தெரியாமல் வீட்டை விற்ற ரியல் எஸ்டேட் புரோக்கர் மீது போலீசில் புகார்

வீடு விற்பனை செய்வதற்காக கோவையைச் சேர்ந்த தரகரை அணுகினர்.தரகர் பெயருக்கு பவர் எழுதிக் தரப்பட்டது.
முத்துசாமி குடும்பத்தினர் புகார் அளித்த காட்சி.
முத்துசாமி குடும்பத்தினர் புகார் அளித்த காட்சி.
Published on

பல்லடம் :

பல்லடம் அருகே உள்ள கோடங்கிபாளையம் ஊராட்சி பெருமா கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் முத்துசாமி(வயது 53). இவரது மனைவி மல்லிகா(48) .இந்த நிலையில் முத்துசாமியின் தாயார் அருக்காணி அம்மாள் அவருக்கு சொந்தமான வீட்டை முத்துசாமி பெயரில் எழுதி வைத்துள்ளார். இந்த நிலையில் கடந்த சில வருடங்களாக முத்துசாமிக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது.

இதனால், வீட்டை விற்பனை செய்து அதில் வரும் பணத்தை வைத்து மருத்துவ செலவுகளை செய்து கொள்ளலாம் என குடும்பத்தார் முடிவு செய்து, வீடு விற்பனை செய்வதற்காக கோவையைச் சேர்ந்த தரகர் கோபிநாத் என்பவரை அணுகினர். கோபிநாத் தனது பெயரில் பவர் எழுதிக் கொடுத்தால் உடனடியாக விற்றுத் தருகிறேன் என்று கூறியதாக கூறப்படுகிறது. இதனால் அவரது பெயருக்கு பவர் எழுதிக் தரப்பட்டது. இதன் பின்னர் பலமுறை கோபிநாத்தை தொடர்புகொண்டபோது அவர் சரியான பதில் கூறவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில், வீட்டின் பத்திரத்திற்கு வில்லங்க சான்று போட்டு பார்த்த போது, கோபிநாத், முத்துசாமிக்கு சொந்தமான வீட்டை ரூ. 35 லட்சம் ரூபாய்க்கு சத்யன் என்பவருக்கு விற்பனை செய்தது தெரிய வந்தது. இந்த பத்திரப்பதிவு மோசடிக்கு முத்துசாமிக்கு உடல்நிலை சரியில்லை என போலியான மருத்துவ சான்றிதழ் தயாரித்து வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து முத்துசாமி குடும்பத்தினர் திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகார் திருப்பூர் மாவட்ட நில மோசடி புகார் பிரிவுக்கு மாற்றப்பட்டு இந்த மோசடி குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com