தீபாவளி பண்டிகை மண்டபங்களில் தற்காலிக கடை அமைக்க அனுமதி அளிக்கக்கூடாது - வியாபாரிகள் வலியுறுத்தல்

மண்டபங்களில் திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு மட்டுமே அனுமதி உள்ளது.மண்டபங்களில் கடை போடுவதால் விற்பனை பாதிக்கப்பட்டு தொழிலை விட்டே சொல்லுமளவுக்கு நெருக்கடி ஏற்படுகிறது.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

உடுமலை

மடத்துக்குளம் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் தற்காலிகமாக (தீபாவளி வரை) ஜவுளிக்கடை அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றது.இதற்கு வியாபாரிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் மடத்துக்குளம் வட்டார அனைத்து வியாபாரிகள் சங்கத்தினர் மற்றும் துணிக்கடை வியாபாரிகள் சங்கத்தினர் இணைந்து மடத்துக்குளம் தாசில்தார் செல்வியை சந்தித்து மனு அளித்தனர்.இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது:-

மண்டபங்களில் திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு மட்டுமே அனுமதி உள்ளது.வணிக ரீதியான பொருட்களை மண்டபங்களில் வைத்து விற்பனை செய்வதற்கான அனுமதி எதுவும் இல்லாமல் சில வெளியூர் வியாபாரிகள் தீபாவளி சமயத்தில் கடைகள் அமைக்கின்றனர். இவர்கள் அரசுக்கான விற்பனை வரி, ஜிஎஸ்டி உள்ளிட்ட எந்த வரியினங்களையும் செலுத்தாமல் குறைந்த விலையில் பொருட்களை விற்பனை செய்கின்றனர்.இதனால் அரசுக்கு பெருமளவில் வருவாய் இழப்பு ஏற்படுகிறது.

பல்வேறு சிக்கல்களுக்கு மத்தியில் மாதம்தோறும் வாடகை, ஆள் சம்பளம் உள்ளிட்டவற்றுக்காக செலவு செய்து வியாபாரிகள் தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட விசேஷ தினங்களில் நடைபெறும் விற்பனையை நம்பி காத்திருக்கின்றனர்.இதற்கென பெருமளவில் கொள்முதலும் செய்துள்ளனர்.ஆனால் மண்டபங்களில் கடை போடுவதால் விற்பனை பாதிக்கப்பட்டு தொழிலை விட்டே சொல்லுமளவுக்கு நெருக்கடி ஏற்படுகிறது.ஆண்டுதோறும் ஏற்படும் இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.பேரூராட்சியில் முறையான அனுமதி பெற்று, ஜி.எஸ்.டி. பில் போட்டு கடை நடத்தினால் அவர்களும் வியாபாரி என்ற முறையில் நாங்கள் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கப் போவதில்லை.எனவே மண்டபங்களில் தற்காலிக கடை அமைக்க அனுமதி அளிக்கக் கூடாது'என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து மண்டபத்தில் கடை அமைப்பதற்கான பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

X

Maalai Malar
www.maalaimalar.com