

பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள காமநாயக்கன்பாளையம் காலனி பகுதியில் மதுரைவீரன், பட்டத்தரசி அம்மன் கோவில் உள்ளது. சுமார் 100 ஆண்டுகள் பழமையான இந்த கோவில் முன்பாக வெங்ககல்லிலான மகாமுனி சிலை அமைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், மதுரை வீரன் கோவில் பகுதியில் அந்த பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் மதுபானம் அருந்துதல், உள்ளிட்ட சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். இது குறித்து அவ்வப்போது பொதுமக்கள் எச்சரிக்கை செய்தும் அவர்கள் நிறுத்தவில்லை. இந்த நிலையில் கடந்த 6-ந்தேதி கோவில் அருகே சில இளைஞர்கள் மதுபானம் அருந்திவிட்டு பேசிக்கொண்டிருந்தனர்.
இதில் அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டது. வாய்த்தகராறு முற்றி கைகலப்பாக மாறிய நிலையில் கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த மகாமுனி சிலையை உடைத்து, தகர்த்து எடுத்து வீசியுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த பொதுமக்கள் அந்த சிலையை தேடியபோது சிலை கிடைக்கவில்லை.
இதையடுத்து காமநாயக்கன்பாளையம் போலீசில் புகார் அளித்தனர். வழக்குப்பதிவு செய்த காமநாயக்கன்பாளையம் போலீசார் விசாரணை செய்து சாமி சிலையை உடைத்து கிணற்றில் வீசிய அதே பகுதியை சேர்ந்த சவுண்டன் மகன் மணிகண்டன்(30) என்பவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.