

உடுமலை:
உடுமலை கல்வி மாவட்ட குறுவள மையங்களில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி வகுப்பு நடந்தது. அதன்படி, தேவனூர்புதூர் குறுவளமையத்திற்கான பயிற்சி வகுப்பு அங்குள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.
பள்ளி தலைமையாசிரியர் நாகேஸ்வரி தலைமை வகித்தார். அதேநேரம் பள்ளிக்கு ஒரு தலைமையாசிரியர், ஒரு ஆசிரியர், இரு உள்ளாட்சி உறுப்பினர்கள், ஒரு கல்வியாளர் என 12 பள்ளிகளில் இருந்து 5 பேர் வீதம், 60 பேர் கலந்து கொண்டனர்.
இப்பயிற்சி முகாமில் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் முக்கிய அம்சங்கள், குழந்தைகளுடைய உரிமைகள், பள்ளி மேலாண்மை குழுவின் பங்கு மற்றும் பொறுப்புகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
மேலும் பள்ளியின் வளர்ச்சிக்காக பள்ளி மேம்பாட்டுத் திட்டம் எவ்வாறு தயாரிக்க வேண்டும், அதற்கு பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் பெற்றோர்கள், ஆசிரியர்கள் எவ்வாறு கலந்துரையாடி பள்ளியின் வளர்ச்சிக்கு திட்டமிட வேண்டும் என்பது குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது.
இதேபோல் இல்லம் தேடி கல்வி மைய தன்னார்வலர்களுக்கும் இப்பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. ஆசிரியர்கள் கண்ணபிரான், பாரதிபாபு ஆகியோர் கருத்தாளர்களாக செயல்பட்டனர்.