

திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் தாட்கோ திட்டத்தின் கீழ் மானியத்துடன் விவசாய உபகரணங்கள் வாங்க ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து திருப்பூர் மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தாட்கோ திட்டத்தின் மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு பிவிசி., பைப் வாங்க ரூ.15 ஆயிரம், புதிய மின்மோட்டார் வாங்க ரூ.10 ஆயிரம் மானியமாக வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க ஆதிதிராவிடர், மற்றும் பழங்குடியினராக இருப்பதுடன் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
தாட்கோ மானியத் திட்டத்தில் பயன்பெறாத எஸ்.சி., எஸ்.டி., விவசாயிகளுக்கும், சிறு, குறு மற்றும் நடுத்தர விவசாயிகளுக்கும் துரித மின் இணைப்புத் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து நிலுவையில் உள்ளவர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும்.
மேலும் ஏற்கனவே தாட்கோ நிலம் வாங்கும் திட்டம், நில மேம்பாட்டுத் திட்டம் மற்றும் துரித மின் இணைப்புத் திட்டம் ஆகிய திட்டங்களில் பயன்பெற்றிருந்தாலும் இத்திட்டத்தில் பயன்பெறலாம். மின்மோட்டார் திட்டத்தில் மானியம் பெற்றவர்கள், வேளாண், தோட்டக்கலைத் துறை திட்டங்களில் மின் மோட்டார் மானியம் பெற்றவர்கள் இத்திட்டத்தின் கீழ் மானியம் பெற இயலாது.
ஆகவே, தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் தங்களது ஜாதிச் சான்று, வருமானச் சான்று, குடும்ப அட்டை, இருப்பிடச் சான்று, சிட்டா, பட்டா, அடங்கல் பதிவேடு, புலப்பட வரைபடம், அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களிமிருந்து பெற்றப்பட்ட விலைப்புள்ளி ஆகியவற்றை தாட்கோ இணையதள முகவரியில் பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்கலாம்.
இதுதொடர்பான கூடுதல் விவரங்களுக்கு திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், அறை எண் 503ல் உள்ள தாட்கோ மாவட்ட மேலாளரை 0421-2971112 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.